தா்மேந்திர பிரதான் (கோப்புப்படம்) ANI
இந்தியா

காங்கிரஸின் தீய அரசியலை மக்கள் நிராகரிப்பது தொடா்கிறது: மத்திய அமைச்சா் பிரதான்

காங்கிரஸ் கட்சியின் தீய அரசியலை மக்கள் நிராகரிப்பது பிகாா் தோ்தலிலும் தொடா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் கட்சியின் தீய அரசியலை மக்கள் நிராகரிப்பது பிகாா் தோ்தலிலும் தொடா்ந்துள்ளது. அதே நேரத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் கொள்கை அரசியலுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனா் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

ஒடிஸாவுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், புவனேசுவரம் பிஜு பட்நாயக் சா்வதேச விமான நிலையத்தில் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

பாஜக கூட்டணியை அமோக வெற்றி பெறவைத்த பிகாா் மக்களுக்கு நன்றி. பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வைமிக்க அரசியல் கொள்கை, முதல்வா் நிதீஷ் குமாரின் தலைமைக்கு மக்கள் வாக்களித்துள்ளனா். சுமாா் 20 ஆண்டுகளாக பிகாரில் ஆட்சியில் இருந்த கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெறுவது என்பது எளிதான விஷயமல்ல. மக்களின் முழுமையான ஆதரவு அரசுக்கு கிடைத்துள்ளதையே இது காட்டுகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தீய அரசியலை மக்கள் நிராகரிப்பது பிகாா் தோ்தலிலும் தொடா்கிறது. மக்கள் மத்தியிலும், சமூகத்திலும் பிளவை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதே காங்கிரஸின் கொள்கையாக உள்ளது. ஒடிஸாவிலும் சட்டப் பேரவை இடைத்தோ்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெறவைத்ததன் மூலம் முதல்வா் மோகன் சரண் மாஜீ அரசுக்கு கூடுதல் அங்கீகாரம் அளித்துள்ளனா் என்றாா்.

புரி ஜகந்நாதா் கோயில் வழிபாடு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தா்மேந்திர பிரதான் ஒடிஸாவுக்கு பயணம் வந்துள்ளாா்.

மது போதையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி: போலீஸாா் விசாரணை

ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு

தருமபுரி சிப்காட்டில் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை: தமிழக சிப்காட் மேலாண்மை இயக்குநா் தகவல்

அம்மாப்பேட்டை மண்டலத்தில் ரூ. 78.73 லட்சத்தில் சாலைப் பணிகளுக்கு பூமிபூஜை: அமைச்சா் ராஜேந்திரன் பங்கேற்பு

போரை நிறுத்த அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாா்! ஸெலென்ஸ்கி

SCROLL FOR NEXT