இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் நச்சுதன்மையுள்ள ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' எனும் இருமல் மருந்தால் மத்தியப் பிரதேசத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு(Central Drugs Standard Control Organisation) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, இந்தியாவில் இருந்து நச்சுத்தன்மையுள்ள இருமல் மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா? என மத்திய அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கோல்ட்ரிஃப் மருந்து வெளிநாடுகளுக்கு எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று கூறியது.
நச்சுள்ள இருமல் மருந்துகள்
தமிழ்நாட்டில் ஸ்ரீசன் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த 'கோல்ட்ரிஃப்'(Coldrif), குஜராத்தில் ரெட்னெக்ஸ் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த 'ரெஸ்பிஃபிரெஷ் டிஆர்'(Respifresh TR) மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான ஷேப் பார்மா பிரைவேட் லிமிடெட் தயாரித்த 'ரீ லைஃப்'(ReLife) ஆகிய மருந்துகளில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய டைஎத்திலீன் கிளைகால் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
'கோல்ட்ரிஃப் மருந்தில் அதிகளவாக 48.6%, ரீ லைஃப் - 0.616%, ரெஸ்பிஃபிரெஷ் -1.342% என்ற அளவில் டைஎத்திலீன் கிளைகால் கலக்கப்பட்டுள்ளது. இது மருந்தை அடர்த்தியானதாக மாற்றவும் இனிப்புச் சுவைக்காகவும் பயன்படுத்தக் கூடியது. மேலும் இது நீரில் கரையக்கூடியது. நிறமற்ற, வாசனையற்றதாகும்.
இந்த மருந்துகளை குறைந்த அளவில் குழந்தைகளுக்குக் கொடுத்தாலே கடுமையான விளைவுகள் ஏன், மரணம்கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.