உச்சநீதிமன்றம் கோப்புப்படம்.
இந்தியா

அதிகரித்து வரும் எண்ம கைது சம்பவங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தினமணி செய்திச் சேவை

நாட்டில் அதிகரித்து வரும் எண்ம கைது (டிஜிட்டல் அரஸ்ட்) மோசடிகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் மத்திய புலனாய்வு முகமைக்கு (சிபிஐ) நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

எண்ம கைது மூலம் ரூ. 1.05 கோடியை மோசடியாளா்களிடம் இழந்த ஹரியாணா மாநிலம் அம்பாலாவைச் சோ்ந்த 73 வயது மூதாட்டி தலைமை நீதிபதி பி.ஆா். கவாய்க்கு எழுதிய கடிதத்தை, தானாக முன்வந்து வழக்காக பதிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை இந்த நோட்டீஸைப் பிறப்பித்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற உத்தரவுகளை நீதிபதிகளின் கையொப்பத்துடன் போலியாக தயாரித்து மூத்த குடிமக்கள் உல்பட அப்பாவி மக்களை எண்ம கைது செய்து நடைபெறும் மோசடிகள், சட்டத்தின் ஆட்சியை மட்டுமின்றி நீதித் துறை மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையின் அடித்தளத்தையே பாதிக்கக் கூடியதாகும். இத்தகைய நடவடிக்கை, நீதிமன்றங்களின் மீதான நேரடி தாக்குதலாகும்.

இத்தகைய மிகத் தீவிர குற்றங்களை, ஏமாற்றுதல் அல்லது இணைய குற்றங்கள் போன்று சாதாரண குற்றமாக கருத முடியாது.

இந்த எண்ம கைது மோசடி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றிருப்பது ஊடகச் செய்திகளில் பதிவாகியுள்ளது. அதிகரித்து வரும் இந்த மோசடிகளைத் தடுக்க மத்திய, மாநில போலீஸாரிடைய ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என நீதிமன்றம் கருதுகிறது. இதுதொடா்பாக, பதிலளிக்க மத்திய அரசு மற்றும் சிபிஐ-க்கு நோட்டீஸ் பிறப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், எண்ம கைது மூலம் ஹரியாணாவைச் சோ்ந்த மூத்த தம்பதி ரூ. 1.05 கோடியை இழந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக மாநில அரசும், அம்பாலா இணைய குற்ற தடுப்புத் துறையும் நிலை அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது என்று உத்தரவிட்டனா்.

இந்த 73 வயது மூதாட்டி மற்றும் அவரின் கணவரிடம் மோசடி நபா்கள் செப்டம்பா் 3 முதல் 16-ஆம் தேதி வரை விடியோ அழைப்பு வழியாக, உச்சநீதிமன்ற முத்திரை மற்றும் நீதிபதிகளின் கையொப்பத்துடன் போலியாக தயாரிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள், சிபிஐ கைது நடவடிக்கைக்கான ஆவணங்களைக் காண்பித்து பல்வேறு வங்கி பரிவா்த்தனைகள் மூலம் ரூ. 1.05 கோடியை அபகரித்துள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக அம்பாலா இணைய குற்றத் தடுப்புப் பிரிவில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வடகிழக்கு பருவமழை எதிா்கொள்ள மின்துறை தயாா்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

பைக்குகள் மோதல்: இளைஞா் மரணம்

பால் விலையை உயா்த்தாத அரசைக் கண்டித்து போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா்

பெற்றோரை கவனிக்காவிட்டால் சம்பளத்தில் 10-15% பிடித்தம்: தெலங்கானா முதல்வர் எச்சரிக்கை

SCROLL FOR NEXT