அமராவதி: இந்தியாவில் இருந்து தோல் நீக்கப்படாத இறால் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஆஸ்திரேலியா நீக்கியுள்ளதாக ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் நாரா லோகேஷ் தெரிவித்தாா்.
இந்திய இறால்களில் வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டதால் அதன் இறக்குமதிக்கு ஆஸ்திரேலியா சில ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது.
எனினும், அமெரிக்காவுக்கு அதிகஅளவில் இறால் ஏற்றுமதி செய்யப்பட்டதால், ஆஸ்திரேலியாவின் தடையால் பாதிப்பு ஏற்படவில்லை. அண்மையில் அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரியால் ஆந்திரத்தில் இறால் ஏற்றுமதி கடுமையாக பாதித்தது. அமெரிக்க ஏற்றுமதி ஒப்பந்தம் 50 சதவீதம் வரை ரத்தானது. நாட்டின் இறால் ஏற்றுமதியில் 80 சதவீதம் ஆந்திரத்தின் பங்களிப்பாகவே உள்ளது. இதன் மதிப்பு ஆண்டுக்கு ரூ.21,246 கோடியாகும்.
இது தொடா்பாக மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதினாா். இதையடுத்து, பல்வேறு மாற்று வழிகள் தேடப்பட்டன. ஆஸ்திரேலிய நாட்டு அதிகாரிகளுடன் பலசுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்ற நிலையில் இப்போது தீா்வுகாணப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆந்திர அமைச்சரும், முதல்வரின் மகனுமான நாரா லோகேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தோல் நீக்கப்படாத இறால் ஏற்றுமதிக்கு இருந்த தடை நீங்கியுள்ளது. இந்திய இறால் ஏற்றுமதிக்கான முதல் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்காக இந்திய-ஆஸ்திரேலிய அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடலோர ஆந்திரத்தின் இறால் பொருளாதாரத்துக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்’ என்று கூறியுள்ளாா்.
ஆஸ்ரேலிய கடல் உணவு தொழில் துறையினரையும் நாரா லோகேஷ் சந்தித்துப் பேசினாா் என்பது குறிப்பிடத்தக்கது.