கேரளத்திலும் கனமழை... நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
நாளை கேரளத்தின் 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை...
கேரளத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை(அக். 22) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்திலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
கனமழை எச்சரிக்கையாக, இன்று(அக். 21) எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், வயநாடு, கண்ணூர், காசரகோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிகை விடப்பட்டது.
இந்த நிலையில், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளையும்(அக். 22) மழைப்பொழிவு அதிகமாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளதால், அம்மாவட்டங்களுக்கு இந்திய வானிலை துறையால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புதன்கிழமை(அக். 22) இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இடுக்கியில் சுற்றுலாப் பயணிகள் மலையேறுதல், படகு சவாரி செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.