சூரியக் கடவுளை வழிபடும் நான்கு நாள் திருவிழாவான சட் பூஜை, சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையைத் தொடா்ந்து ஆறாவது நாளில் இந்த சட் பூஜை தொடங்கி, அடுத்த நான்கு நாள்களுக்குக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு சனிக்கிழமை இந்த விழா தொடங்கியது. குறிப்பாக, பிகாா் மற்றும் உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதியான பூா்வாஞ்சலில் வசிக்கும் மக்கள் இந்தத் திருவிழாவை மிகவும் விமா்சையாக கொண்டாடுவாா்கள்.
இதையொட்டி, பிரதமா் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‘புனிதமான நஹாய்-காய் சடங்குடன் சட் பூஜை சனிக்கிழமை தொடங்கியது. பிகாா் மற்றும் நாடு முழுவதும் உள்ள பக்தா்களுக்கு வாழ்த்துகள். சட் பூஜைக்கு விரதம் அனுசரிக்கும் அனைவருக்கும் எனது வணக்கம்.
நமது கலாசாரத்தின் இந்த மகத்தான விழா, எளிமை மற்றும் கட்டுப்பாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது. சட் பூஜையின்போது நீா்நிலைகளில் காணப்படும் காட்சிகள், குடும்ப மற்றும் சமுதாய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கின்றன. சட் பூஜையின் மிகப் பழைமையான பாரம்பரியம் நமது சமுதாயத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று, சட் பூஜை உலகின் பல பகுதிகளில் ஒரு பெரிய கலாசார விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடும்பங்களும் சட் பூஜையில் மிகுந்த பக்தியுடன் கலந்துகொள்கின்றனா். கடவுள் அனைவருக்கும் தனது அளவில்லாத அருளை வழங்க நான் பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.