இணையைத் தேடி... மகாராஷ்டிரத்திலிருந்து தெலங்கானாவுக்குச் சென்ற ஆண் புலி!
புலிகளின் இனப்பெருக்க காலம் தொடங்கியது...
இணையைத் தேடி மகாராஷ்டிரத்திலிருந்து ஒரு ஆண் புலி தெலங்கானாவுக்கு இடம்பெயர்ந்துள்ள சம்பவம் அரங்கேறியிருக்கிறது. புலிகளின் இனப்பெருக்க காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையில், பெரும்பாலும் ஆண் புலிகள் இணையைத் தேடி நெடுந்தூரம் பயணித்து தங்களுக்கான இனப்பெருக்கம் செய்வதற்காக செல்வதாக வன அதிகரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரத்தின் சந்திரபூர் மாவட்டத்திலுள்ள கன்ஹர்கான் வன விலங்கு சரணாலயத்திலிருந்து ஒரு ஆண் புலி வெளியேறியதுடன், வனப் பகுதியில் ஓடும் ப்ரணஹிதா ஆற்றைக் கடந்து எதிர் கரையிலுள்ள தெலங்கானாவின் கோமாரம் பீம் ஆசிஃபாபாத் மாவட்டத்துக்குள்பட்ட வனப் பகுதிக்குச் சென்றடைந்திருப்பதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காக அந்தப் புலி சுமார் 45 - 50 கி.மீ. வரை பயணித்திருக்கக்கூடும் என்றும் அந்தப் புலியின் நடமாட்டத்தை அதிகாரிகள் வனப் பகுதியின் கேமிராக்கள் வழியாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இனப் பெருக்கத்துக்காக மட்டுமில்லாது உணவு, தண்ணீருக்காகவும் அந்தப் புலி இடம்பெயர்ந்திருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ள அவர்கள், கடந்தாண்டில் மொத்தம் 4 புலிகள் தெலங்கானா வனப் பகுதிக்குள் நுழைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.