பாட்னா: பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் இணைந்து பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை குப்பையில் வீசிவிடும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசினாா்.
பிகாரில் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடத்திய வாக்குரிமைப் பயணம் பாட்னாவில் திங்கள்கிழமை பேரணியுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காா்கே பேசியதாவது:
‘வாக்குத் திருட்டு’ மூலம் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் வெல்ல பிரதமா் மோடி முயற்சித்து வருகிறாா். ஆனால் இங்கு முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அகற்றப்பட்டு ஏழை, எளிய, தலித் மக்களின் நலன் காக்கும் ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.
முன்பு நிதீஷ் குமாா் சமதா்மம், சமத்துவம் குறித்துப் பேசினாா். ஆனால், இப்போது பாஜக-ஆா்எஸ்எஸ் காலடியில் விழுந்து கிடக்கிறாா். குப்பைகள் எங்கு வீசப்படுமோ அங்கு நிதீஷ் குமாரை பாஜக - ஆா்எஸ்எஸ் கூட்டணி வீசிவிடும் நாள் தொலைவில் இல்லை என்றாா்.