சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜெகன் மோகன் ஆதரவு! துரோகத்தை வரலாறு மறக்காது! - காங்கிரஸ்
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜெகன் மோகன் ஆதரவு அளித்திருப்பது பற்றி...
ஜெகன் மோகன் ரெட்டி செய்த துரோகத்தை வரலாறு மறக்காது என்று ஆந்திர மாநிலத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான வாக்குப் பதிவு இன்று (செப். 9) காலை 10 மணிக்குத் தொடங்கியது.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேர்தலில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67), எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பி. சுதா்சன் ரெட்டியும் (79) போட்டியிடுகின்றனா்.
இந்த தேர்தலைப் புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் நேற்றே அறிவித்துவிட்டன.
இதனிடையே, கடந்த மக்களவைத் தேர்தலில் ஆந்திரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளித்துள்ளது.
வாக்களிப்பதற்கு முன்னதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி பில்லி சுபாஷ் சந்திர போஸ், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் மாணிக்கம் தாகூர் பதிவிட்டிருப்பதாவது:
”ஜெகன் மோகன் ரெட்டியின் துரோகத்தை வரலாறு மன்னிக்காது. ஆர்எஸ்எஸ் ஆதரவு வேட்பாளருக்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம், ஆந்திர மக்களின் நலனைவிட, சிபிஐ வழக்குகளை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஜனநாயக சக்திகளுடன் நிற்பதற்குப் பதிலாக, மோடி - பாபுவின் அழுத்தத்துக்கு சரணடைந்துள்ளார். மக்களின் விருப்பத்துக்கு மாறாக தனது நலனுக்காக சமரசம் செய்யப்பட்ட நாளாக நினைவுகூரப்படும்.
ஆந்திரம் தைரியத்துக்கு பெயர்பெற்றது. ஆனால், அவர் கோழைத்தனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். தலைவர்கள் தில்லிக்கு பயந்து வளைந்தால், தங்களை நம்பிய மக்களைக் காட்டிக் கொடுப்பது போன்றது.
ஜெகன் மோகம் போராளியாக அல்ல, சிபிஐ, நீதிமன்றத்தில் இருந்து தப்பிக்க தனது முதுகெலும்பை விற்ற அரசியல்வாதியாக நினைவுகூரப்படுவார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாக அவரது கட்சி எம்பிக்கள் என்னிடம் தெரிவித்தார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.