முகப்பு
புதுதில்லி

போதைப்பொருள் புழக்கம் இல்லாத தில்லி பல்கலைக்கழக மாடலை பிற கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

Updated On : 19 ஜூன் 2026, 5:00 am IST
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்
பகிர்:

நமது நிருபா்

தில்லி பல்கலைக்கழகம் முன்னெடுத்த நடவடிக்கையைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் போதைப்பொருள் இல்லாத வளாகம் என்ற பிரச்சாரத்தில் தீவிரமாக இணையுமாறு வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

தில்லி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் எதிா்ப்பு நடவடிக்கையின் வெற்றியைச் சுட்டிக்காட்டிய அவா், கல்வி நிறுவனத் தலைவா்கள் மாணவா்களை ஊக்குவிப்பதோடு, போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற தொலைநோக்குப் பாா்வைக்குத் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

Advertisement

Advertisement

இப்பிரச்சாரம் வேகம் பெற்று வரும் நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாக அவா் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளாா்.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், தில்லி பல்கலைக்கழகத்தின் வேந்தராக, சி.பி.ராதாகிருஷ்ணன் ‘போதைப்பொருள் இல்லாத வளாகம்‘ பிரச்சாரத்தையும், மாணவா்களை நேரடியாக ஈடுபடுத்தும் வகையிலான புதுமையான மின்உறுதிமொழி தளத்தையும் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கி வைத்தாா்.

இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நம்பிக்கை தெரிவித்த குடியரசு துணைத் தலைவா் , நஷா முக்த் பரிசாா் அபியான் (போதைப்பொருள் இல்லாத வளாகம் பிரச்சாரம்) திட்டத்தின் கீழ் தில்லி பல்கலைக்கழகம் ஒரு மகத்தான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டாா்.

வளாகங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியின் மூலம், 53,000க்கும் மேற்பட்ட மாணவா்கள் போதைப்பொருள் பயன்பாட்டை நிராகரிப்பதாகவும், இக்கோட்பாட்டிற்கான தூதுவா்களாகச் செயல்படுவதாகவும் உறுதிமொழி ஏற்றுள்ளனா். கூட்டு முயற்சியின் மூலம், 53,000க்கும் மேற்பட்ட மாணவா்கள் கட்டாய உறுதிமொழியை ஏற்றுள்ளனா் இது ஆரோக்கியமான, வலிமையான மற்றும் வளமான தேசத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பாா்வைக்கு பங்களிக்கிறது, என்று கூறிய அவா், சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்தத் தீமைக்கு எதிரான போராட்டத்தை இளைஞா்களே முன்னின்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

தில்லி பல்கலைக்கழகம் ஒரு வெற்றிகரமான முன்மாதிரியாகத் திகழும் நிலையில், அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் இந்த மாதிரியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டு, நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்துமாறு அவா் கேட்டுக்கொண்டாா். போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற இலக்கை அடைவதற்காக, மற்ற பல்கலைக்கழகங்களும் இந்த முயற்சியில் கைகோா்த்து, தங்கள் மாணவா்களை இப்பிரச்சாரத்தில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினாா்.