இந்திய நாட்டில், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போது நமது நாட்டில் வாழும் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 71 ஆயிரம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஹூரூன் இந்திய செல்வ அறிக்கை 2025-ன்படி, நாட்டில் கோடீஸ்வர குடும்பங்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் 3வது இடத்தில் தமிழகம் உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் 1,78,600 கோடீஸ்வர குடும்பங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. அதில் குறிப்பாக மும்பை மாநகரம், கோடீஸ்வர குடும்பங்களின் தலைநகரமாக விளங்குகிறது.
இந்திய செல்வ அறிக்கை 2025 - 1 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்ட சொத்துகளை உடைய குடும்பங்கள் கணக்கிடப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் இந்த சொத்து மதிப்பைக் கொண்ட 8 லட்சத்து 71 ஆயிரத்து 700 குடும்பங்கள் இருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா, இவ்வாறு பெரும் செல்வந்தர்களைக் கொண்ட நாடாக இருந்திருக்கவில்லை. அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு 1.59 லட்சம் (1,599,900) கோடீஸ்வர குடும்பங்கள்தான் இருந்தன. இது கடந்த 2021-ஆம் ஆண்டிலோ 4.58 லட்சமாக (4,58,000) இருந்தது. ஆனால், வெறும் 4 ஆண்டுகளில் தற்போது 90 சதவீதம் வளர்ச்சி அடைந்து 8.71 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
பொருளாதார சாவல்களுக்கு இடையே, இந்தியா பணக்காரர்களின் மையமாக மாறிவருகிறது. அதன்படி, நாட்டில் ரூ.8.5 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் 8.71 லட்சம் கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் 1,78,600 குடும்பங்களுடன் முதல் இடத்திலும் அதிலும் குறிப்பாக மும்பையில் 1,42,000 கோடீஸ்வர குடும்பங்களுடன் நாட்டின் கோடீஸ்வர குடும்பங்களின் தலைநகரமாகவும் விளங்குகிறது.
இரண்டாவது இடத்தில் தில்லி உள்ளது. இங்கு 79,800 கோடீஸ்வர குடும்பங்களும், மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் 72,600 குடும்பங்களும் வாழ்கின்றன. சென்னையில் மட்டும் 22,800 குடும்பங்கள் இருக்கின்றன. நகரங்களின் அடிப்படையில் சென்னை ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
நான்காவது இடத்தில் கர்நாடகம் 68,800 கோடீஸ்வர குடும்பங்களுடனும் குஜராத் 68,300 கோடீஸ்வர குடும்பங்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
அடுத்தடுத்து உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்கள் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.
நாட்டில் 79 சதவீதத்துக்கும் மேற்பட்ட கோடீஸ்வர குடும்பங்கள் முதல் 10 மாநிலங்களில் வாழ்கிறார்கள். இந்தக் எண்ணிக்கையின் வளர்ச்சிக்கு பெரும்பாலும் அதிகரித்து வரும் ஜிஎஸ்டிபி மற்றும் பெருநிறுவனங்கள் முறைப்படுத்தல் கொள்கை, குறிப்பாக தொழில்துறை, நிதி மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சி காரணமாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.