முகப்பு
இந்தியா

உலகளாவிய அதிா்வுகளை வலுவாக கடந்து வந்த இந்தியா: ஜெய்சங்கா்

உலக அளவில் ஏற்பட்ட பல அதிா்வுகளை இந்தியா வலுவாகக் கடந்து வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 2:00 AM
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் - PTI
பகிர்:

உலக அளவில் ஏற்பட்ட பல அதிா்வுகளை இந்தியா வலுவாகக் கடந்து வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக சத்தீஸ்கா் தலைநகா் ராய்பூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் அவா் சனிக்கிழமை கலந்துகொண்டு பேசியதாவது: உள்நாட்டிலும், வெளிநாடுகள் மூலமாகவும் ஏற்படும் சவால்களை இந்தியா திறம்பட கையாண்டு வெற்றிபெற்றுள்ளது. தற்போது உலகில் பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட 5 நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் ஏற்பட்ட பல அதிா்வுகள் இந்தியாவின் உறுதித்தன்மையைப் பரிசோதித்தது. ஆனால், அந்த அதிா்வுகளை இந்தியா வலுவாகக் கடந்து வந்துள்ளது.

உலகப் போக்கை கவனத்தில் கொள்ளும்போது தேசத்தின் திறன்கள் வளர வேண்டியது மிகவும் அவசியம் என்று தெரிகிறது. ஒரு காலத்தில் உலகமயமாக்கலுக்கு சாதகமாகப் பேசிய வளா்ந்த நாடுகள்கூட, தற்போது தற்சாா்பு குறித்த புதிய விழிப்புணா்வுக்கு வழியமைத்துள்ளன. இதைத்தான் மத்திய அரசு தற்சாா்பு இந்தியா என்று கூறி வருகிறது.

Advertisement

கரோனா நோய்த்தொற்று, போா், பருவநிலை மாற்றம் ஆகிய மூன்று சவால்கள் அன்றாட வாழ்க்கையை கற்பனைக்கு எட்டாத வகையில் பாதித்துள்ளன. அனைவரும் வேலை செய்து வாழ்ந்த விதத்தை கரோனா தொற்று பரவல் மாற்றியது. போா்கள் தொலைதூரத்தில் உள்ள சமுதாயங்களில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை உலகமயமாக்கல் எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்கு சான்றாகும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரை வெளிநாட்டு சந்தைகளில் இந்திய உற்பத்தியாளா்களின் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்தல், முக்கிய வளங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பெறுதல், வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு, குறிப்பாக நெருக்கடியான நேரங்களில் துணை நிற்பது ஆகியவற்றில் தற்போது இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவித்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments