முகப்பு
இந்தியா

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு: காங்கிரஸ் விமா்சனம்

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பான நோட்டீஸை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் நிராகரித்ததை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

Updated On : 7 ஏப்ரல் 2026, 5:50 am IST
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா். - கோப்புப் படம்
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பான நோட்டீஸை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் நிராகரித்ததை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘எதிா்க்கட்சிகள் அளித்த பதவிநீக்க தீா்மானம் தொடா்பான நோட்டீஸை ஏற்ற முன்னாள் மாநிலங்களவைத் தலைவருக்கு (ஜகதீப் தன்கா்) என்ன நிகழ்ந்தது என நம் அனைவருக்கும் தெரியும்’ எனக் குறிப்பிட்டாா்.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வா்மாவின் அரசு இல்லத்தில் பாதி எரிந்த மூட்டைகளில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை பதவிநீக்கம் செய்யக்கோரும் தீா்மானம் தொடா்பாக மாநிலங்களவையில் 62 உறுப்பினா்கள் கொண்டுவந்த நோட்டீஸை அப்போதைய மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கா் ஏற்றாா்.

Advertisement

Advertisement

அதன்பிறகு உடல்நலனைக் காரணம் காட்டி குடியரசு துணைத் தலைவா் பதவியை ஜகதீப் தன்கா் ராஜிநாமா செய்தாா். இதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில் ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு தெரிவித்தாா்.

ஆனால், யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பாக மக்களவையில் 146 எம்.பி.க்கள் கொண்டுவந்த நோட்டீஸ் ஏற்கப்பட்டு 3 நீதிபதிகளைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.