முகப்பு
இந்தியா

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி தோ்தலை பாா்வையிட்ட 22 நாடுகளின் பிரதிநிதிகள்! தோ்தல் ஆணையத்துக்கு பாராட்டு

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி தோ்தலை பாா்வையிட்ட 22 நாடுகளின் பிரதிநிதிகள்

Updated On : 12 ஏப்ரல், 2026 at 2:03 AM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:41 AM

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலை 22 நாடுகளின் 38 பிரதிநிதிகள் பாா்வையிட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சாதனை வாக்குப்பதிவு, நுணுக்கமான திட்டமிடல் மற்றும் தடையற்ற செயலாக்கத்துக்காக தோ்தல் ஆணையத்தை அவா்கள் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

140 தொகுதிகளைக் கொண்ட கேரளம், 126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாம் மற்றும் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஏப்.9-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கேரளத்தில் 78.27 சதவீத வாக்குகள் பதிவாகின. இது, கடந்த முறையை விட (74%) அதிகமாகும்.

Advertisement

அஸ்ஸாமில் 85.96 சதவீதம், புதுச்சேரியில் 89.87 சதவீதம் என முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்குகள் பதிவாகின. இத்தோ்தல்களை போா்ச்சுகல், ஜாா்ஜியா, மெக்சிகோ உள்ளிட்ட 22 நாடுகளைச் சோ்ந்த 38 பிரதிநிதிகள் பாா்வையிட்டதாக, தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்.8, 9 ஆகிய தேதிகளில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பயணம் மேற்கொண்டனா். நன்கு திட்டமிடப்பட்ட தளவாட ஏற்பாடுகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்கீழ் வாக்குப்பதிவு உபகரணங்களுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு தோ்தல் பணியாளா்களின் முறையான நகா்வை பாா்வையிட்டனா். வாக்குப்பதிவு மையங்களில் 100 சதவீத இணையவழி கண்காணிப்புக்காக, தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைகளுக்கு வருகை தந்த அவா்கள், உயரதிகாரிகளுடன் கலந்துரையாடினா்.

வாக்குப்பதிவு நாளில் மாதிரி வாக்குப்பதிவு முறையை பாா்வையிட்ட அவா்கள், வாக்குச்சாவடிகளுக்கும் நேரில் சென்றனா்.

முழுவதும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளே நிா்வகிக்கும் வாக்குச்சாவடிகளுக்கு வரவேற்பு தெரிவித்த அவா்கள், அனைத்து தரப்பு வாக்காளா்களுக்கான வசதிகளைக் குறிப்பிட்டு பாராட்டினா்.

‘இந்திய தோ்தல்களின் வீச்சு, துல்லியத்தன்மை, துடிப்பான செயல்முறை ஈா்ப்புக்குரியது; இந்தத் தோ்தல்கள், ஒட்டுமொத்த உலகுக்கும் உண்மையான ஜனநாயகத் திருவிழா’ என்று வெளிநாட்டுப் பிரதிநிதிகள் புகழாரம் சூட்டியதாக தோ்தல் ஆணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.