பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?
பிரதமர் மோடி மீதான ராகுல் காந்தியின் எண் 16 புதிருக்கான பதில் குறித்து இணையவாசிகள் அலசல்
மக்களவையில் பிரதமர் மோடி மீதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் எண் 16 புதிருக்கான பதிலைப் பற்றி சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
மக்களவை விவாதத்தின்போது, பிரதமர் மோடி உற்சாகமிழந்து காணப்பட்டதாகக் கூறிய ராகுல், அதற்கான காரணம் எண் 16 என்று புதிர் போட்டார். மேலும், ஆளுங்கட்சியின் பிரச்னைகளுக்கான பதிலும் அந்த எண் 16 புதிரில் இருப்பதாக ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கிக் கைகாட்டியபடி ராகுல் பேசினார்.
இருப்பினும், இந்தப் புதிருக்கான பதிலைத் தெரிவிக்காத ராகுல், அதற்கான பதிலை யார் வேண்டுமானாலும் தம்மைத் தொடர்புகொண்டு கூறலாம் என்றும் தெரிவித்தார்.
Advertisement
இதனையடுத்து, ராகுலின் எண் 16 புதிருக்கான பதில் குறித்து சமூக ஊடகங்களில் பலரும் அலசி வருகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பதிலும், அதற்கான விளக்கங்களையும் அளித்து வருகின்றனர்.
ராகுலின் எண் 16 புதிரைக் குறிப்பிட்டு,
பிரதமர் மோடியின் திருமணத்தின்போது, அவரது (முன்னாள்) மனைவி யசோதா பென் மோடியின் வயது 16.
2024 மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசக் கட்சியின் 16 உறுப்பினர்களின் ஆதரவால்தான் பாஜக ஆட்சி அமைந்தது; நீடித்திருக்கிறது.
உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் எப்ஸ்டீன் கோப்புகளில் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் 16 வயதினரே. மேலும், டிரம்ப்புக்கு நெருங்கியவர்களுடன் இந்திய தலைமை தொடர்புகொள்ள உதவுமாறு 2017 மார்ச் 16-ல் எப்ஸ்டீனுக்கு அனில் அம்பானி செய்தி அனுப்பினார். அதுமட்டுமின்றி, இதற்கடுத்துதான் 2017 ஜூலை 4-ல்தான் பிரதமர் மோடி, முதன்முறையாக இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார்.
சமீபத்தில் 2026-ல் இஸ்ரேல் பயணத்தின்போது, இந்தியாவும் இஸ்ரேலும் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இவ்வாறாக, சமூக ஊடகங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கங்களைக் கூறி வருகின்றனர்.
இவை ஒருபுறமிருக்க, புதிர்போட்ட ராகுல் மீதும் சிலர் விமர்சனங்களை வைக்கின்றனர்.
2001-ல் பாஸ்டன் விமான நிலையத்தில் ராகுல் காந்தியிடமிருந்து போதைப்பொருள்கள் மீட்கப்பட்டதையடுத்து, அவரை விடுவிக்க பிரதமர் அடல் பிஹாரி 16 அழைப்புகள் மேற்கொண்டதை ராகுலே சுட்டிக் காட்டியிருக்கலாம்.
இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பாக, ராகுல் மீது உடனடியாக எஃப்ஐஆர் பதிவுசெய்ய, ஏப்ரல் 16-ல்தான் அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராஜீவ் காந்தியின் காலத்தில் ஸ்வீடன் வானொலி போபர்ஸ் ஊழலை அம்பலப்படுத்திய 1987 ஏப்ரல் 16-ஐ ராகுல் சுட்டிக் காட்டியிருக்கலாம் என்றெல்லாம் பதிலுக்குக் 'கலாய்த்து' வருகின்றனர்.
முன்னதாக, மக்களவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பேசுகையில், 2023 மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவுடன் இணைத்துக்கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தில் 16 என்ற எண் அதிக அர்த்தம் கொண்டிருக்கிறது.
மக்களவையில், இந்த சட்டத்திருத்த மசோதாக்கள் மீது நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருந்த போது, நான் இங்கே அமர்ந்து அதனை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் உற்சாகம் குறைந்து காணப்பட்டார். அவரால் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. அப்போதுதான் நேற்றைய தேதியை நான் கவனித்தேன். தெளிவாக புரிந்தது, இந்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முயன்றது ஒரு தவறு. அது அனைவருக்கும் தெரிந்திருந்தது என்றார்.
என் செல்போனில் ஏப்ரல் 16 என்ற தேதியைப் பார்த்தபோது, ‘கடவுளே, என்ன ஒரு ஆச்சரியம்!’ என்று வியந்தேன். அதுதான் அந்த எண், பதினாறு. அந்தப் புதிருக்கான விடை 16 என்ற எண்ணில் உள்ளது. இப்போது நான் சொல்வது யாருக்காவது புரிந்தால், தயவுசெய்து எனக்கு ஒரு தகவல் அனுப்புங்கள் என்று கூறியபடி, ஒரு காகிதத்தில் 16 என்று எழுதப்பட்டிருந்ததைக் காட்டினார்.
இந்த எண்தான், இந்த 16 எண்தான் அந்த எண். இந்த 16 எண்தான் அனைத்துக்குமான பதில். உங்களுக்கு இதற்கான விடை தெரிந்தால் எனக்கு தகவல் அனுப்பலாம். ட்விட்டரிலும் நீங்கள் சொல்லலாம். உங்கள் பிரச்னைகான பதிலும் இந்த 16 என்ற எண்ணில்தான் உள்ளது. அதனை நீங்கள் விரைவில் கண்டடைவீர்கள் என்று தெரிவித்தார்.