ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?
ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களவையில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 16 என்ற எண்ணைக் காட்டி ஒரு புதிரைப் போட்டு விடை சொல்லுமாறு கூறியிருக்கிறார்.
மகளிர் இட ஒதுக்கீடு, யூனியன் பிரதேச சட்டத் திருத்தம், மக்களவை தொகுதி மறுவரையறை உள்ளிட்ட சட்டத் திருத்தங்களைக் கொண்ட அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது நேற்று தொடங்கி இன்று வரை விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், நேற்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, விவாதத்தில் பேசியபோது, அவரிடம் உற்சாகமே இல்லை, உடைந்துபோயிருப்பது போல காணப்பட்டார். அவர் பேசும்போது அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் செல்போனில் தேதியைப் பார்த்தேன். அதில் ஏப்ரல் 16 என இருந்தது. அடக்கடவுளே, என்ன ஆச்சரியம் என வியந்து போனேன்.
Advertisement
ஆம். அந்த எண்தான், பதினாறு. இந்த புதிருக்கான விடை 16 என்ற எண்ணில்தான் உள்ளது. இப்போது நான் சொல்வது யாருக்காவது புரிந்தால், தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள் என்று கூறி ஒரு காகிதத்தில் 16 என எழுதப்பட்டிருந்ததை எடுத்துக் காட்டினார்.
இந்த நிலையில், ராகுல் சொன்ன 16 என்ற எண் என்ன என்பது குறித்து இணையத்தில் பரவலாக அலசப்பட்டு வருகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அனைவருக்குமான புதிர் ஒன்று..
நேற்று பிரதமர் உற்சாகம் குறைந்து காணப்பட்டார். திடீரென நான் கவனித்தேன், ஏப்ரல் 16 என்ற தேதியை. கடவுளே, எவ்வளவு ஆச்சரியம், அந்த எண் 16. என்று ராகுல் சொன்ன வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக, பதினாறு என்ற எண் எப்ஸ்டீன் என்பது போல ஒலிக்கிறதா? என்று அடைப்புக்குறிக்குள் கூறப்பட்டுள்ளது. இதனால், எப்ஸ்டீன் கோப்புகளுக்கும், ராகுல் சொன்ன புதிருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.