கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்
இத்தாலி பயணம் மேற்கொண்டிருக்கும் மோடியை ராகுல் விமர்சித்தது பற்றி...
தலைக்கு மேல் பொருளாதாரப் புயல் வீசிக் கொண்டிருக்கும்போது, நமது பிரதமர் இத்தாலியில் மிட்டாய் விநியோகிப்பதில் மும்முரமாக இருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தனது ஐந்தாவது மற்றும் இறுதி நாள் சுற்றுப்பயணமாக இன்று இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். அப்போது, மெலோனிக்கு இந்தியாவில் பிரபலமான மெலோடி மிட்டாயை பரிசாக மோடி அளித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த பரிசைப் பார்த்த மெலோனி, மிகுந்த உற்சாகம் அடைந்ததோடு, அந்த பரிசு பெற்ற தருணத்தை விடியோவாகப் பதிவு செய்து தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததோடு, பரிசளித்த பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இதனிடையே, மோடியின் இத்தாலி பயணத்தின் புகைப்படங்களும், விடியோக்களும் வைரலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”நம் தலைக்கு மேல் ஒரு பொருளாதாரப் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. ஆனால், நமது பிரதமர் இத்தாலியில் மிட்டாய்களை விநியோகிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், சிறு, குறு வியாபாரிகள் என அனைவரும் கண்ணீர் விடுகின்றனர். பிரதமரோ சிரித்துக்கொண்டு ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். பாஜகவினர் கைதட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இது தலைமைத்துவம் அல்ல, கேலிக்கூத்து.” என்று விமர்சித்துள்ளார்.