ஒவ்வொரு நெருக்கடியிலும் ஏழைகள் முதலில் பலியாவது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி!
எரிபொருள் தட்டுப்பாடு விவகாரத்தில் பிரதமருக்கு ராகுல் கேள்வி...
கரோனாவை எதிர்கொண்டதைப் போன்றுதான் எரிபொருள் தட்டுப்பாட்டையும் பிரதமர் மோடி கையாண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் பெரும்பாலான இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்னை நிலவி வருகின்றது. தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளன.
இந்த நிலையில், மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
”எல்பிஜி எரிவாயு நெருக்கடியை நாங்கள் கரோனா நெருக்கடியைக் கையாண்டது போலவே கையாள்வோம் என்று பிரதமர் மோடி சொல்லியிருந்தார்.
உண்மையாகவே, அவர்கள் அதைதான் செய்துள்ளார்கள்.
கரோனா விவகாரத்தைப் போலவே, பூஜ்ஜியக் கொள்கை, பிரம்மாண்டமான அறிவிப்புகள் மற்றும் ஏழைகளின் மீது சுமத்தப்படும் சுமை.
நாள்தோறும் ரூ. 500 முதல் ரூ. 800 வரை ஊதியம் ஈட்டும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, சமையல் எரிவாயு என்பது எட்டாத ஒன்றாகவே மாறிவிட்டது. இரவில் வீடு திரும்பும் ஒரு தொழிலாளியிடம், அடுப்பை எரியூட்டுவதற்குக்கூடப் பணம் இல்லை. இதன் விளைவு என்ன? நகரத்தை விட்டு விலகுவது; கிராமத்தை நோக்கித் தப்பியோடுவது.
ஜவுளி ஆலைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் முதுகெலும்பாகத் திகழும் அந்தத் தொழிலாளர்கள், இன்று உடைந்து நொறுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜவுளித் துறை ஏற்கெனவே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. உற்பத்தித் துறை மூச்சுத்திணறித் தவிக்கிறது. இந்த நெருக்கடி எங்கிருந்து வந்தது? ராஜதந்திரமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் இது உருவானது. அந்தப் தவறை ஒப்புக்கொள்ள அரசாங்கம் இன்றும் மறுத்து வருகிறது.
ஆணவம் ஒரு கொள்கையாக மாறும்போது, பொருளாதாரம் சிதைகிறது, தொழிலாளர்கள் புலம்பெயர்கிறார்கள், தொழிற்சாலைகள் அழிந்துபோகின்றன, நாடு பல சகாப்தங்கள் பின்னோக்கித் தள்ளப்படுகிறது.
ஒரே ஒரு கேள்விதான் எழுகிறது, ஒவ்வொரு நெருக்கடியின்போதும், முதலில் ஏழைகள் பலியாவது ஏன்? இது ஏழைகளின் கேள்வி மட்டுமல்ல, இது நம் அனைவரின் கேள்வியும்கூட.” எனக் குறிப்பிட்டுள்ளார்.