எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதத்தை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம்! அதில் எழுதியிருந்தது என்ன?
அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதம் குறித்து....
நியூயார்க் சிறையில் உயிரிழப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதத்தை அமெரிக்க நீதிபதி ஒருவர் புதன்கிழமை (மே 6) வெளியிட்டார்.
அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மர்மமான முறையில் உயிரிழந்தாலும், தற்கொலை செய்துகொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த விடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அமெரிக்காவில் கோரிக்கை வலுத்ததைத் தொடர்ந்து, 2025 டிசம்பர் 19 ஆம் தேதி அமெரிக்க நீதித்துறையால் அந்தத் தகவல்கள் வெளியிடத் தொடங்கப்பட்டன.
Advertisement
அதன் பின்னர், 2026 ஜனவரி 30 ஆம் தேதி சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட கூடுதல் ஆவணங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, வெளியிடப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் எப்ஸ்டீன் எழுதியதாகத் தெரிவித்ததாவது:
”அவர்கள் என்னை மாதக்கணக்கில் விசாரித்தார்கள். ஆனால், ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை!“
"நம் வாழ்விலிருந்து விடைபெறுவதற்கான நேரத்தை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்வது ஒரு வரம்!"
"நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்? அழுது புலம்பவா? இதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. இதற்கு எந்தத் தகுதியும் இல்லை!” என அக்கடிதம் முடிவு பெற்றுள்ளது.
எப்ஸ்டீன் இறக்கும்போது, காணாமல் போன சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் ஆகியவை, அமெரிக்க நீதித்துறையின் மீது தொடர்ச்சியான சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.