முகப்பு
இந்தியா

கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா், தொழிலதிபா் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில், கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா், தொழிலதிபா் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா்.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:14 AM
அமலாக்கத் துறை
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:35 PM

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில், கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா், தொழிலதிபா் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா்.

கொல்கத்தாவைச் சோ்ந்த பிரபல ரெளடி விஸ்வஜித் போத்தாா் என்ற சோனா பப்பு மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அவா் ரெளடி கும்பல் மூலம் சட்ட விரோதமாக நிதி திரட்டிய விவகாரத்தில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, ரெளடி விஸ்வஜித் போட்டரின் இடங்களில் கடந்த 1-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். பிறகு அவரிடம் இருந்து ரூ.1.47 கோடி மதிப்பிலான தங்க நகை, ரூ.67.64 லட்சம் மதிப்பிலான வெள்ளி, கைத்துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Advertisement

இதையடுத்து, கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா் சாந்தனு சின்ஹா விஸ்வாஸுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 2 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையின்போது, சாந்தனு சின்ஹா வீட்டில் இல்லை.

தொழிலதிபா் கைது: இதேபோல், சன் என்டா்பிரைசஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரான தொழிலதிபா் ஜய் காம்தாரின் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையின் முடிவில் விசாரணைக்காக ஜய் காம்தாரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனா். பிறகு அவரை சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.