மக்களவை 37.9%, மாநிலங்களவை 46% திரிணமூல் பெண் உறுப்பினர்கள்: மமதா
மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் உரைக்கு மமதா பதில்
மக்களவை 37.9%, மாநிலங்களவை 46% திரிணமூல் காங்கிரஸ் பெண் உறுப்பினர்கள் இருப்பதாக மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தங்களது சுயநல அரசியலுக்காக மகளிருக்கு அதிகாரமளிப்பதை காங்கிரஸ் திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டன. இதை பெரும் சாதனைபோல் எண்ணி அவர்கள் கொண்டாடியதை பெண்கள் மட்டுமன்றி நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கவனித்து வருகின்றனர்.
மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கு வருங்காலத்தில் உரிய பாடம் புகட்டி பெண்கள் பதிலடி தரும் நாள் வெகு தொலைவில் இல்லை என நேற்றைய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
Advertisement
இதற்குப் பதில் தெரிவித்து மமதா பானர்ஜி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:
பிரதமர் நேர்மையாகப் பேசுவதற்குப் பதிலாக, நாட்டைத் தவறாக வழிநடத்தத் தேர்ந்தெடுத்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
திரிணமூல் காங்கிரஸ் எப்போதுமே பெண்களுக்கு அதிக அளவிலான அரசியல் பிரதிநிதித்துவத்தை அளித்து வருகிறது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை என இரண்டிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களின் மிக அதிக விகிதத்தை நாங்கள் கொண்டுள்ளோம். மக்களவையில், எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 37.9% பெண்கள். மாநிலங்களவையில், நாங்கள் 46% பெண் உறுப்பினர்களை நியமித்துள்ளோம். இதனால், மகளிர் இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
மோடி அரசாங்கம் தனது சுயநல அரசியல் நோக்கங்களுக்காகப் பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்தித் திணிக்கத் திட்டமிட்டிருந்த தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத்தான் நாங்கள் அடிப்படை ரீதியாக எதிர்க்கிறோம். அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்றுவதையும், இந்த நாட்டைப் பிரிப்பதையும், மற்ற மாநிலங்களின் இழப்பில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காக அரசியல் எல்லைகளை மாற்றி அமைத்து, தொகுதி மறுவரையறை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் நாங்கள் எதிர்க்கிறோம். இது கூட்டாட்சி ஜனநாயகத்தின் மீதான ஒரு தாக்குதல். இதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
இந்த நோக்கத்தில் இந்த அரசு உண்மையாகவே அக்கறை கொண்டிருந்தால், செப்டம்பர் 28, 2023 அன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, ஏன் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் காத்திருந்தது? பல மாநிலங்களில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது அவசரமாக நிறைவேற்றியது ஏன்? தொகுதி மறுவரையறையுடன் இணைத்தது ஏன்? திரிணமூல் காங்கிரஸ் பல தசாப்தங்களாக பெண்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. நாங்கள் தொடர்ந்தும் அவ்வாறே செய்வோம். ஆனால், ஆளும் நிர்வாகத்துக்குப் புரியாமலும் மதிக்காமலும் இருக்கும் விஷயத்தில் நாங்கள் அறிவுரை பெற மாட்டோம்.
பிரதமரே, அடுத்த முறை நீங்கள் நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, உங்களைச் சோதிக்கவும், சவால் விடவும், பொறுப்பேற்றக் கொள்ளவும் வாய்ப்புள்ள நாடாளுமன்ற அவையில் நின்று பேசும்போது துணிச்சலைக் காட்டுங்கள்.
நேற்று நீங்கள் செய்தது கோழைத்தனமானது, பாசாங்குத்தனமானது மற்றும் நயவஞ்சகமானது. அதிகாரம் உங்கள் கைகளை விட்டு நழுவுவதை உங்களால் உணர முடியும். அதை இன்னும் சிறிது காலத்திற்குத் தக்க வைத்துக் கொள்ள நீங்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.