நாங்கள் தோற்கவில்லை; பதவி விலக மாட்டேன்! மமதா
வாக்கு எண்ணிக்கையில் பாஜக முறைகேடு செய்துள்ளதாக மமதா பானர்ஜி குற்றச்சாட்டு...
மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்துள்ளது என்றும் முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி முதல்முறையாக அங்கு பாஜக ஆட்சியமைக்க உள்ளது.
இந்த தேர்தலில் பாஜக 207, திரிணமூல் காங்கிரஸ் 80, காங்கிரஸ் 2, இதர கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
Advertisement
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டி வருகிறார்.
இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்துள்ளது. 100க்கும் மேற்பட்ட தொகுதிகளை எங்களிடமிருந்து பாஜக திருடியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து 90 லட்சம் பேரை நீக்கியுள்ளனர். தேர்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன்தான் பாஜக இந்த முறைகேட்டைச் செய்துள்ளது. மக்களின் உரிமையைப் பறிக்கவும் வாக்குபதிவு இயந்திரங்களைச் சூறையாடவும் தேர்தல் ஆணையம் வில்லனாக செயல்பட்டுள்ளது. வாக்களித்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 80 - 90% சார்ஜ் இருக்கிறது. எப்படி?
தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, அவர்கள் எங்கள் கட்சியினரைக் கைது செய்யத் தொடங்கினர். அனைத்து இடங்களிலும் சோதனைகளைத் தொடங்கினர். அவர்கள் அனைத்து ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளையும் மாற்றினர். தங்கள் கட்சியிலிருந்து ஆள்களைத் தேர்ந்தெடுத்தனர்.
நீதிமன்றம்கூட எங்களுக்கு நீதி வழங்கத் தவறிவிட்டது. என் வாழ்நாளில் இவ்வ்ளவு மோசமான அருவருப்பான தேர்தலை நான் பார்த்ததில்லை. பிரதமர் மோடி, அமித் ஷா இந்த ஜனநாயகத்தை சீரழித்துவிட்டனர்.
நான் வாக்கு எண்ணும் மையத்தில் தாக்கப்பட்டேன். என் வயிற்றில் எட்டி உதைத்தார்கள், அப்போது சிசிடிவி கேமரா இணைக்கப்பட்டிருந்தது.
நான் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் மக்களால் தோற்கடிக்கப்படவில்லை, சதியால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்.