3 நாள் பயணமாக ஜெர்மனி செல்லும் ராஜ்நாத் சிங்!
ஜெர்மனி செல்வதன் முக்கியத்துவம் பற்றி..
இருதரப்பு பாதுகாப்புத் தொழில்சார் வரைபடத்தை இறுதி செய்யும் நோக்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ஏப். 21(நாளை) ஜெர்மனி செல்கிறார்.
இந்த சந்திப்பின் முக்கியத்துவமாக, பல்வேறு ராணுவத் தளவாடங்களின் கூட்டு மேம்பாடு, கூட்டு உற்பத்தியைத் தொடங்குவதற்கு, இரு நாடுகளுக்கும் ஒரு கட்டமைப்பை இந்த வரைபடத் திட்டம் வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெர்லினில், ராஜ்நாத் சிங் ஜெர்மானியப் பிரதிநிதி போரிஸ் பிஸ்டோரியஸ் மற்றும் பிற மூத்த தலைவர்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்.
Advertisement
பாதுகாப்புத் தொழில்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துதல், இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) போன்ற வளர்ந்து வரும் துறைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
மேலும், பாதுகாப்புத் தொழில்சார் ஒத்துழைப்புக்கான ஒரு வரைபடமும், ஐ.நா. அமைதி காக்கும் படைகளுக்கான பயிற்சி ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடும், இரு நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் முன்னிலையில் கையொப்பமிட வாய்ப்புள்ளது.
மேக்-இன்-இந்தியா முன்னெடுப்பின் கீழ், கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், ஜெர்மன் பாதுகாப்புத் தொழில்துறையின் முக்கியப் பிரதிநிதிகளுடனும் ராஜ்நாத் சிங் கலந்துரையாடுகிறார்.
ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.