பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! மோடி பேச்சுக்கு காங்கிரஸ் பதில்!
மோடி பேச்சுக்கு காங்கிரஸ் பதில் அளித்திருப்பது பற்றி...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுவதை நம்புவதற்கு பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் தொகுதி மறுவரையறை மசோதாவையும் இணைத்து மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தோற்கடித்தனர்.
இதனிடையே தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்த எதிர்க்கட்சிகளை தோற்கடித்து பாடம் புகட்ட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
Advertisement
இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இன்று காலை ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:
”பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அவர்களுக்கு அனைத்தும் தெரியும். இன்று, கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் நகர சபைகளில் 15 லட்சம் பெண் பிரதிநிதிகள் உள்ளனர். இது பா.ஜ.க-வின் முயற்சியால் ஏற்பட்டதல்ல, காங்கிரஸ் கட்சியால் சாத்தியமானது. 2029-ஆம் ஆண்டு முதல் மகளிருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், அதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு வேண்டும் என்றும் நாங்கள் அரசை வலியுறுத்துகிறோம்.
ஆனால், பா.ஜ.க. மகளிர் இடஒதுக்கீடாக பார்க்காமல், தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் ஆட்சியில் நீடிப்பதற்கும் பயன்படுத்த முயற்சித்தது.
இன்றும் நாங்கள் கூறுவது என்னவென்றால், ஏப்ரல் 29க்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள், திருத்தங்களை எழுத்துப்பூர்வமாகத் தெரிவியுங்கள். அவற்றை மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுகிறோம்” எனத் தெரிவித்தார்.