மணிப்பூரில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிரான பேரணியில் மோதல்!
மணிப்பூரில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்திய மக்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்திய மக்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தின் விஷ்ணுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த த்ரோங்லாபி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 7 அன்று நடந்த குண்டுவீச்சுத் தாக்குதலில் இரு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இதனால், அருகிலுள்ள மாவட்டங்கள் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தலைநகர் இம்பால் அருகே மயாய் லம்பி பகுதி முதல் கெய்ஷாம்தாங் பகுதி வரையுள்ள 7 கி.மீ. தூரத்திற்கு மக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிச்செல்ல முயன்றபோது அங்கு பாதுகாப்புப் படையினருடன் மோதல் வெடித்துள்ளது.
போராட்டக்காரர்கள் லோக் பவன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை நோக்கி முன்னேறியதால் அங்கு மோதல் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனால், அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை பாதுகாப்புப் படையினர் வீசியுள்ளனர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த மிக குறைந்த அளவிலான பாதுகாப்புப் படையினரே அங்கிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மோதல் காரணமாக மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறி சாலை மறியல் மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக, இம்பாலில் 19 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.