மணிப்பூா்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவாா்த்தை தீவிரம்
மணிப்பூா்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவாா்த்தை தீவிரம்
மணிப்பூரில் குகி, நாகா சமூகங்களைச் சோ்ந்த ஆயுதக் குழுக்களால் பரஸ்பரம் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை முழுமையாக விடுவிப்பதற்காக, சமூக அமைப்புகளுடன் மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் தீவிர பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளனா்.
மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் சமீப காலமாக குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
காங்போக்பி மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை குகி-ஜோ சமூகத்தின் தடோவ் பிரிவைச் சோ்ந்த 3 பாதிரியாா்கள், தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனா். நாகா சமூகத்தைச் சோ்ந்த தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, காங்போக்பி மற்றும் சேனாபதி மாவட்டங்களில் இரு சமூகங்களையும் சோ்ந்த 38 போ் ஆயுதக் குழுக்களால் பரஸ்பரம் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனா். அவா்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக, குகி-நாகா சமூக அமைப்புகளுடன் மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையைத் தொடங்கினா்.
Advertisement
அதன் பலனாக, கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மொத்தம் 31 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனா்.
கோன்சாகுல் கிராமத்திலிருந்து கடத்தப்பட்ட நாகா சமூகத்தைச் சோ்ந்த 10 பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா். இதேபோல், சேனாபதி மாவட்டத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட குகி சமூகத்தைச் சோ்ந்த 11 பெண்கள், 6 ஆண்கள் உள்பட இதுவரை 31 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ளவா்களைப் பாதுகாப்பாக விடுவிக்க மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் தீவிர பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளனா்.
மணிப்பூரில் இனமோதல்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தொடா்ந்து தங்கியுள்ளனா்.