குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த 38 பேர் சிறைப்பிடிப்பு! - மணிப்பூர் அரசு அறிவிப்பு!
மணிப்பூரில் 38 பேர் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டது குறித்து...
மணிப்பூரில், நாகா மற்றும் குகி சமூகங்களைச் சேர்ந்த 38 பேர் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில உள்துறை அமைச்சர் கோவிந்தாஸ் கோந்தௌஜம் தெரிவித்துள்ளார்.
காங்போக்பி மாவட்டத்தில், கடந்த புதன்கிழமை (மே 13) அன்று அடையாளம் தெரியாத தீவிரவாதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் தேவாலயத்தின் தலைவர்கள் 3 பேர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், குகி மற்றும் நாகா சமூகங்களைச் சேர்ந்த சுமார் 38 பேர் வெவ்வேறு குழுக்களால் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும், அவர்களை விடுதலை செய்வது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மணிப்பூரின் உள்துறை அமைச்சர் கோந்தௌஜம் இன்று (மே 14) அறிவித்துள்ளார்.
Advertisement
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம். சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உள்ளூர்வாசிகள் சிறைப்பிடிக்கப்பட்டது மற்றும் தேவாலய தலைவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், காங்போக்பி, சூராசந்திரப்பூர் மற்றும் சாண்டேல் ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.