வியத்நாம் படகு விபத்து! பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் யார் யார்? முழு விவரம்...
வியத்நாமில் விபத்துக்குள்ளான படகில் தமிழர்கள் உள்பட பயணித்தவர்கள் விவரம் பற்றி...
வியத்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 20 பேர் அந்த படகில் சென்ற நிலையில் 8 பேர் இறந்ததாக அந்த படகில் பயணித்த மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலா இடமான, பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 படகு ஊழியர்களும் இருந்தனர்.
Advertisement
Advertisement
இன்று பகல் 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படகில் சுமார் 20 தமிழர்கள் இருந்திருக்கின்றனர்.
தமிழர்கள்
இறந்தவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருக பிரபு (44) என்று தெரியவந்திருக்கிறது. சிறந்த வணிக செயல்பாட்டுக்காக, லாவா மொபைல் நிறுவனத்தின் சார்பில் சுற்றுலாவாக இவர் வியத்நாம் அழைத்துச் செல்லப்பட்டவர். முருக பிரபு, இரு நாள்களுக்கு முன்பாக தனது நண்பருடன் வியத்நாம் சென்றுள்ளார்.
இவர்களில் பலரும் லாவா மொபைல் நிறுவனத்தின் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த இருவர், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியானதாகக் கூறப்படுகிறது.
படகில் பயணித்தவர் கூறியது....
படகில் பயணித்த நிர்மல் குமார் என்பவர், தனியார் தொலைக்காட்சியிடம் தொலைபேசி மூலமாக பேசியது:
"நாங்கள் 20 பேர் தமிழ்நாட்டில் இருந்து அந்த படகில் சென்றோம். தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கேரளத்தில் இருவர், கர்நாடகத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்துவிட்டனர்.
பழனியில் இருந்து நானும் என் நண்பர் முருக பிரபுவும் சென்றோம், முருக பிரபு உயிரிழந்துவிட்டார். படகில் பயணித்தவர்கள் சேலம், தருமபுரி, சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இறந்தவர்களின் உடல்களை விரைந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையை முன்வைக்கிறேன்" என கண்ணீருடன் தெரிவித்தார்.
வியத்நாம் படகில் சென்ற 32 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது.
படகில் சென்றவர்கள் (பெயர் - தந்தை பெயர்)
1. பாலசுப்ரமணி - பழனிசாமி
2. செல்வம் - பிச்சையா
3. செந்தில் குமார் - ஜெயவேல்
4. சிவகுமார் - முத்துக்குமாரசாமி
5. நிர்மல் குமார் - சேதுராமன்
6. முருக பிரபு - ஆறுமுகம்
7. ரூபன் செல்வ நாதன் - ஜேக்கப் யேசுபாதம்
8. ஸ்ரீதர் - தர்மராஜன்
9. விக்னேஷ்வர் - ராதாகிருஷ்ணன் கோபால்
10. ராமசுப்பு - அண்ணாவி
11. அபுதல்கா - ஜாஹிருதீன்
12. ஸ்ரீதர் - சுந்தர்ராஜன்
13. வம்ஷீதர் - செல்லூர் ராம்ராஜ்
14. செஞ்சடைவேல் - குப்புசாமி
15. நாகலமடுகு - சோஹன்
16. நல்லபேட்டை ஆதிசேஷய்யா - ரவிதேஜா
17. ஷேக் அப்துல்லா - அப்துல் மஜீத்
18. ராஜீவ் - கலைவாணன்
19. பாலாஜி - நடேசன்
20. வினய குமார் - சித்தாபுரம் பாஸ்கரா
21. ரவிசங்கர் - சுகுமாரன்
22. விபுல் - உத்தம் சந்த்
23. சந்தோஷ் குமார் - சாந்திலால்ஜெயின்
24. பாபு - குப்புசாமி
25. அழகுராஜன் - சிவசாமி
26. வசந்த குமார் - ஆனந்தன்
27. ஸ்ரீதர் - முடியம்
28. ஜெய லக்ஷ்மி - கெல்லி
29. கிஷோர் - கெல்லி
30. அவிகோட் செரியன் தாமஸ் - தாமஸ்
31. லோவெனி - தாமஸ்
32. ரமேஷ் குமார் - பேச்சியப்பன்
உயிரிழந்தவர்கள் யார் யார் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதுபற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பதாக வியத்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேபோல இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கவும் அவர்களது உறவினர்களைத் தொடர்புகொள்ளவும் தூதரக அதிகாரிகள், வியட்நாம் நாட்டு அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி ஆய்வு செய்து வருகின்றனர்.
உதவி எண்கள் அறிவிப்பு
வியத்நாம் படகு விபத்து தொடர்பாக ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஆகிய உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், ஹனோய் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள +84 91 308 9165 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.
லாவா நிறுவனம் அறிக்கை
தங்களது ஊழியர்களை வியத்நாம் அழைத்துச் சென்ற லாவா நிறுவனம் இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
வியத்நாமில் இன்று நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது எனவும் தங்களது ஊழியர்களும் அந்த படகில் பயணித்ததாகவும் கூறிய நிறுவனம், ஊழியர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தூதரகத்துடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளைச் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
வியத்நாம் மற்றும் இந்தியாவில் உள்ள எங்களது குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
Vietnam boat accident: Man from Palani killed, Who are the 32 people travelled?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.