மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்தது குறித்து...
மணிப்பூரில் உக்ருல் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்ததோடு, தெங்னௌபால் மாவட்டத்தில் 18 வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
லிட்டன் காவல் நிலையப் பகுதியில் உள்ள மலை கிராமங்களான மோங்கோட் செபு, ஷோங்பெல், முல்லம், சிராராகோங் மற்றும் ரிங்கு ஆகிய பகுதிகளில் இருந்த இந்தப் பதுங்கு குழிகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், அங்கிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டா போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, புதன்கிழமை (ஏப்ரல் 29) அன்று நடைபெற்ற தேடுதல் பணியில், தெங்னௌபால் மாவட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
Advertisement
மணிப்பூரில் நிலவி வரும் இன மோதல்களுக்கு மத்தியில், வன்முறையைக் கட்டுப்படுத்தவும் அமைதியை நிலைநிறுத்தவும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து இதுபோன்ற தேடுதல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ருல் மாவட்டத்தில் உள்ள டாங்குல் நாகா மற்றும் குகி சமூகத்தினரிடையே வன்முறை வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சுமார் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.