இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!
தில்லியில் இந்த ஆண்டின் மிக வெப்பமான நாளாக வியாழக்கிழமை 109.4 டிகிரி வெய்யில் கொளுத்தியிருக்கிறது.
தலைநகர் புது தில்லியில், இந்த ஆண்டின் மிக மிக வெப்பமான நாளாக ஏப்ரல் 23ஆம் தேதி வியாழக்கிழமை பதிவாகியிருக்கிறது. அன்றைய தினம் 109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
புதுதில்லியில் வெள்ளிக்கிழமையும் வெப்பநிலை உயர்ந்தே இருக்கும் என்றும், சனிக்கிழமையும் வெப்பஅலை வீசும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் அடுத்து வரும் நான்கு முதல் ஐந்து நாள்களுக்கு வெப்பஅலை வீசக் கூடும் என்றும் மத்திய மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் அடுத்த 2 அல்லது 3 நாள்களுக்கு வெப்பஅலை வீசக்கூடும் என்பதால் மக்கள் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்க்கவும், நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.
Advertisement
இயல்பான வெப்ப அளவை விட நேற்று கூடுதல் வெப்பம் பதிவாகியிருப்பதாகவும், கடந்த 17ஆம் தேதிக்குப் பிறகு இன்று மீண்டும் வெப்பம் அதிகமாக பதிவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானால், வெப்ப அலை என்று அறிவிக்கப்படும். இது வழக்கமான அளவை விட கிட்டத்தட்ட 10 டிகிரி பாரன்ஹீட்டு அதிகம் என்று கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையும் 107 டிகிரி பாரன்ஹீட் முதல் 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையும் அதிகரித்தே காணப்படலாம் என்பதலால் குழந்தைகள் முதியவர்கள் வெளியில் செல்வதைத் தடுக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பாதியிலேயே வெப்பம் அதிகரித்துக் காணப்பட்டாலும், இந்த ஆண்டு மேற்கு திசைக் காற்றின் குறிக்கீட்டால் முதல் இரண்டு வாரங்களுக்கு வெப்பநிலை சற்று தணிந்தே இருந்துள்ளது.
அடுத்த ஒரு சில நாள்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.