இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
இந்தியா - நியூஸிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏப். 27-ல் கையெழுத்தாகவுள்ளது.
இந்தியா - நியூஸிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏப். 27-ல் கையெழுத்தாகவுள்ளதாக நியூஸி. பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அறிவித்துள்ளார்.
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் மேற்கொள்ள 2025 மார்ச் மாதத்தில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, 2025 டிசம்பரில் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
இந்த நிலையில், இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் திங்கள்கிழமையில் (ஏப். 27) கையெழுத்திடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Advertisement
நியூஸிலாந்தில் இந்தியப் பொருள்களுக்கு கட்டணமில்லா சலுகையை மேற்கொள்ளுவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் விவசாயத் துறை மற்றும் உள்நாட்டுத் தொழிற்துறையின் நலன்களைக் கருத்தில்கொண்டு, நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால், க்ரீம், தயிர், சீஸ் போன்ற பால் பொருள்கள், வெங்காயம், சர்க்கரை, மசாலா பொருள்கள், சமையல் எண்ணெய், ரப்பர் ஆகியவற்றுக்கு இந்தியா வரிச் சலுகை அளிக்கவில்லை.
ஆனால், நியூஸிலாந்திலிருந்து ஆட்டிறைச்சி, கம்பளி, நிலக்கரி, மரப் பொருள்கள் முதலியவை வரிச் சலுகை பெறும்.
இந்த ஒப்பந்தத்தின்கீழ், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சுகாதாரம், கல்வி, கட்டுமானம் போன்ற துறைகளைச் சேர்ந்த 5,000 இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு நுழைவு விசா வழங்கப்படும்.