இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
இந்தியா - ஸ்லோவாக்கியா உறவை வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறித்து...
இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, கூட்டுத் தயாரிப்பு ஆகியவற்றில் இன்று (ஜூன் 15) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்லோவாக்கியாவுக்கு பிரதமா் மோடி ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.
Advertisement
Advertisement
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். புத்தாக்கம், வா்த்தகம், முதலீடு, நிலையான வளா்ச்சி, பாதுகாப்பு, கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடா்புகள் குறித்து இதில் விவாதித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 15) ஸ்லோவாக்கியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். தலைநகர் பிராடிஸ்லாவாவில் பிரதமருக்கு வந்தே மாதரம் பாடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிராடிஸ்லாவா அரசு மாளிகையில், ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, அவருடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ''நமது பாதுகாப்புத் துறை சார்ந்த ஒத்துழைப்பு இருதரப்பு நம்பிக்கை மற்றும் மூலோபாய ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும். இந்த முக்கியமான துறையில் நாம் ஒப்பந்தம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கூட்டு ஒத்துழைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
இதேபோன்று இந்தியா உடனான பாதுகாப்புத் துறை தொடர்புடைய விவகாரங்களில் ஒத்துழைப்பதை ஸ்லோவாக்கியாவும் விரும்புவதாக அந்நாட்டு பிரதமர் ராபர் ஃபிகோ தெரிவித்தார்.
மேலும், ''உலக அரங்கில் இந்தியாவும் ஸ்லோவாக்கியாவும் ஒருங்கிணைந்த கூட்டு ஒத்துழைப்பில் அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற்றப்பாதையில் சென்றுகொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உலகளாவிய பிரச்னைகள், பதற்ற நிலை போன்றவை சுமூக நிலையை எட்ட வேண்டும்'' என விரும்புவதாகக் குறிப்பிட்டார்.