காஜிப்பூர் பாலியல் வன்கொடுமை: உயர்நிலை விசாரணை கோரி ராகுல் வலியுறுத்தல்!
வன்கொடுமை பற்றி உயர்நிலை விசாரணை நடத்த ராகுல் வலியுறுத்தல்...
உத்தரப் பிரசேதம், காஜிப்பூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயர்நிலை விசாரணை கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் பதிவில்,
விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்யக்கூடப் பெற்றோர்கள் கெஞ்ச வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் அரசு தொடர்ந்து நீட்டிக்க எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.
ஹாத்ரஸ், கத்வா, உன்னாவ் தொடர்ந்து காஜியாப்பூர் என பாலியல் வன்கொடுமை கொலைகள் தொடர் நிகழ்வாக மாறி வருகின்றது.
மணிப்பூரைச் சேர்ந்த இளம்பெண் தனக்கு நீதி கிடைக்கும் எனக் காத்திருப்பிலேயே தனது உயிரை நீத்தாள்.
ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்டவர்கள் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் ஏழை எளிய மக்களாகவே இருக்கிறார்கள். குற்றமிழைப்பவர்களுக்குப் பாதுகாப்பும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் துன்புறுத்தல் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மௌனம் காக்கின்றனர்.
குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.
பிரதமர் மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இதற்குப் பதிலளிக்க வேண்டும். உங்கள் ஆட்சியில் பெண்கள் ஏன் இவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். இத்தகைய சூழல்களில் நீதியானது கெஞ்சிக் கேட்கப்படுவதில்லை - அது போராடிப் பறித்துக்கொள்ளப்படுகிறது இவ்வாறு ராகுல் காந்தி இந்தியில் பதிவிட்டுள்ளார்.
பாஜக ஆட்சியில், இது எழுதப்படாத விதியாகவே மாறிவிட்டது, எப்போதெல்லாம் ஒரு பெண் கொடுமைக்கு ஆளாகிறாளோ, அப்போதெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்ணே மேலும் துன்புறுத்தப்படுகிறாள். பெண்கள் குறித்துப் பிரதமர் வெளியிடும் ஆடம்பரமான அறிக்கைகள் வெறும் வெளிவேஷமே.
உன்னாவோ, ஹத்ராஸ், பிரயாக்ராஜ், காஜிப்பூர் என எதுவாக இருந்தாலும் எங்குப் பெண்கள் அநீதிக்கு ஆளாகிறார்களோ, அங்கெல்லாம் பாஜக தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக நின்று, கொடுமை இழைத்தவருக்கே துணை நிற்கின்றது இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காஜிப்பூர் மாவட்டத்தின் கரண்டா பகுதியில் உள்ள கட்டாரியா கிராமத்தில், ஏப்ரல் 15 அன்று பாலத்தின் அருகே சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் நீதி கேட்டுத் தீவிரமாக முழக்கமிட்டு வருகின்றனர்.