கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
முதல் கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகு நடந்த கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலியான சம்பவத்துக்கு ராகுல் கண்டனம்...
காங்கிரஸ் தொண்டர் படுகொலை செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:
''தேர்தலுக்குப் பிந்தைய சூழலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய குண்டர்களால் காங்கிரஸ் தொண்டர் தேவ்தீப் சாட்டர்ஜிபடுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயலாகும். துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Advertisement
இன்றைய மேற்கு வங்கத்தில், ஜனநாயகம் அல்ல; மாறாக, திரிணமூல் காங்கிரஸின் பயங்கரவாத ஆட்சியே மேலோங்கி நிற்கிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, எதிர்தரப்பினரை மிரட்டுவது, தாக்குவது போன்றவையே திரிணமூலின் அடையாளமாக மாறிவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஒருபோதும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டதாக இருந்ததில்லை; இனியும் இருக்காது. நாங்கள் எங்கள் தொண்டர்களை இழந்துள்ளோம்; ஆயினும், நாங்கள் எப்போதும் அகிம்சை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதையையே தேர்ந்தெடுத்துள்ளோம். இதுவே எங்கள் மரபு. இதுவே எங்கள் உறுதிப்பாடு.
குற்றமிழைத்த அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்; மேலும், தேவ்தீப்பின் குடும்பத்தினருக்கு முழுமையான பாதுகாப்பும் உரிய இழப்பீடும் உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்தியாவின் அகிம்சைப் பாரம்பரியத்திற்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய அரசியலுக்கு முன்னால் நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும்'' என ராகுல் பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப். 23 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. சில இடங்களில் வாக்குப் பதிவு நாளன்றே கலவரங்கள் ஏற்பட்டன. இதனிடையே வாக்குப் பதிவு நாளுக்குப்பிறகு வடக்கு அசன்சோல் பகுதியில் நேர்ந்த கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் தேவ்தீப் சாட்டர்ஜி பலத்த காயமடைந்து பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
வடக்கு அசன்சோல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரசென்ஜித்துக்கு நெருக்கமான தேவ்தீப், அவருக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.