தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு விளக்கம்
சட்டப்பேரவைத் தேர்தல்களுக்க்குப் பின் பெட்ரோல், டீசல் விலை குறித்து...
மேற்கு வங்கத்தின் பேரவைத் தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்ததையடுத்து, இந்தியாவிலும் எண்ணெய் விலை அதிகரிக்கலாம் என வதந்திகள் பரவின. 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்ததும் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்று வதந்திகள் பரவின.
இந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் செய்தியாளர்களுடன் பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சுஜாதா சர்மா பேசியதாவது, "எண்ணெய்த் தட்டுப்பாடு என மக்கள் பீதியுடன் பல இடங்களில் எரிபொருள் வாங்குவதைப் பார்க்கிறோம். மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். எங்கும் எண்ணெய்ப் பற்றாக்குறை ஏற்படவில்லை.
Advertisement
மேலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எந்தத் திட்டமும் இல்லை. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம். பீதியுடன் எரிபொருள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனிடையே, தேர்தலுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தேர்தல் காலம் முடிந்தது; பணவீக்கத்தின் வெப்பம் அதிகரிக்கிறது. நீங்கள் பாருங்கள், ஏப். 29 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயரும்.
எரிபொருள் விலை குறைவாக இருந்தபோது, அதன் லாபத்தை மோடி அரசு தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டது. இப்போது எரிபொருள் விலை உயரும்போது, அதனை மக்கள் தலையில் சுமத்திவிட்டு மோடி அரசு மெளனமாக இருக்கிறது.
மலிவாக இருக்கும்போது அரசு கொள்ளையடிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது அதனை மக்கள் மீது சுமத்திவிடுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.