பாஜகவில் ஆம் ஆத்மி எம்பிக்கள்! குடியரசுத் தலைவரை சந்திக்கும் பஞ்சாப் முதல்வர்!
குடியரசுத் தலைவரை பஞ்சாப் முதல்வர் சந்திக்கவுள்ளது பற்றி...
பாஜகவின் ஆம் ஆத்மி எம்பிக்கள் இணைந்ததற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவைச் சந்தித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முறையிடவுள்ளார்.
பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.க்களான ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல் உள்ளிட்ட 7 பேர் பாஜகவில் இணைந்தனர். மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 எம்பிக்கள் இருக்கும் நிலையில், மூன்றில் இரு பங்கு எம்பிக்கள் கட்சி மாறியதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, 7 எம்பிக்கள் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அங்கீகரித்ததை அடுத்து, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3 ஆகக் குறைந்ததாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
7 எம்பிக்களும் பஞ்சாப் மக்களுக்கு துரோகம் செய்ததாகவும், மாநிலங்களவைத் தலைவரின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் ஆம் ஆத்மி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மே 5 ஆம் தேதி சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”பஞ்சாப் மக்கள் அளித்த முடிவையும் ஜனநாயகக் கொள்கைகளையும் பாதுகாப்பதே எங்கள் கடமை. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மே 5, நண்பகல் 12 மணிக்குச் சந்திக்க அவர் நேரம் ஒதுக்கியுள்ளார்.
அனைத்து பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர்களையும் சந்திக்க நேரம் கேட்டபோதிலும், எனக்கு மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்வேன். அவர்கள் வெளியே காத்திருப்பார்கள். நான் மட்டும் சென்று பஞ்சாப் குரலையும், மக்கள் நிலைப்பாட்டையும் குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைப்பேன்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, எங்களின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தெரிவிக்கப்படும். விலைமதிப்பற்ற தங்களின் நேரத்தை ஒதுக்கியதற்காக குடியரசுத் தலைவருக்க் எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Aam Aadmi MPs Join BJP! Punjab Chief Minister to Meet the President!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.