7 பேரும் துரோகிகள்! விவசாயிகள் மரணத்திற்குக் காரணமான கட்சியில் இணைந்துள்ளனர்!
ஆம் ஆத்மி எம்.பி.க்கள் 7 பேர் பாஜகவில் இணைந்துள்ளது பற்றி ஆம் ஆத்மி கருத்து...
பாஜகவில் இணையும் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேரும் துரோகிகள் என்று அக்கட்சியின் தேசிய தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல், ஸ்வாதி மாலிவால், ஹா்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சைனி ஆகிய 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைகின்றனர். ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல் ஆகிய 3 பேரும் நேற்று(ஏப். 24) தில்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த நிலையில் 7 பேரும் இணைந்து பாஜகவில் இணைவது குறித்து மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம் வழங்கியுள்ளனர்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு 10 எம்.பி.க்கள் உள்ள நிலையில் அதில் 3-இல் 2 பங்கு எம்பிக்கள் பாஜகவில் இணைந்துள்ளதால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்றே கூறப்படுகிறது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Advertisement
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர்,
"இவர்கள் ஏழு பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல. இவர்கள் ஏழு பேரும் துரோகிகள். பஞ்சாப் மக்களின் பிரச்னைகளை மாநிலங்களவையில் பேசுவதற்காகவே, ஆம் ஆத்மி கட்சியால் இவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் இந்தத் துரோகிகள், தங்களை அனுப்பிய அந்தக் கட்சியை விட்டு விலகி, பஞ்சாப் மக்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வரும் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். 750 விவசாயிகள் வீரமரணம் அடைந்ததற்குக் காரணமான கட்சி அது. விவசாயிகளின் பிள்ளைகள் மீது வாகனங்களை ஏற்றிச் சென்றதற்குக் காரணமான கட்சி அது. இன்று, இவர்கள் அந்தக் கட்சியுடன் கைகோர்த்து நிற்கிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று கூறினார்.