ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் மினி லாரியில் சுமார் 35 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, இந்தூர் - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, எதிர் திசையில் வந்த எஸ்யூவி ரக கார் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
இந்த விபத்தில் மினி லாரியில் பயணித்தவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனைத் தொடர்ந்து, விபத்தில் சிக்கி காயமடைந்த சுமார் 20 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாகனத்தில் அதிகளவிலான ஆள்களை ஏற்றியதாலும், அதிவேகமாகச் சென்றதாலும்தான் விபத்து நேரிட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.