மும்பையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் விழா கூட்டத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் கலந்துகொண்டார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை வோர்லி பகுதியில் வியாக்யான்மாலா நிகழ்ச்சி நேற்றும் இன்றும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மூத்த ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் மற்றும் பேச்சாளர்கள் மக்களுடன் கலந்துரையாடினர்.
இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் சல்மான்கான் கலந்துகொண்டார்.
சல்மான்கான் நேற்று (பிப்.8) நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு தனது காரில் வந்தபோது, கூட்டத்தில் இருந்த சிலர் தங்கள் போன்களில் அவரைப் புகைப்படம் எடுக்க முயன்றனர்.
நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர் சுபாஷ் கய் மற்றும் புகழ்பெற்ற பாடலாசிரியரும், எழுத்தாளருமான பிரஷூன் ஜோஷி ஆகியோருடன் அமர்ந்திருந்த சல்மான்கான், மோகன் பாகவத் உரையாற்றியதை மிகுந்த கவனத்துடன் கேட்டார். இவர்களுடன் ரன்வீர் சிங்கும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரையாற்றிப் பேசுகையில், “பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், இளைஞர்களும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வந்து சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பார்வையிடுகின்றனர். அவர்களும், அவர்களின் நாட்டில் உள்ள இளைஞர்கள் இதுபோல செயல்பட வேண்டும் என விரும்புகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். போட்டிப்போட உருவாக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். யாருக்கும் போட்டியாகவோ எதிராகவோ செயல்படவில்லை. இந்த சங்கம் புகழையும் அதிகாரத்தையும் தேடவில்லை. நாட்டில் உள்ள செயல்பாடுகள் நன்றாக செயல்பட வேண்டும். அதைத்தான் ஆர்.எஸ்.எஸ்ஸும் விரும்புகிறது. நமது நாடு வல்லரசாக மாறும், அதற்கு கடினமான உழைப்பும் தேவை” எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.