பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட்
பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படக் கூடாது என டி. ராஜா தெரிவித்தது குறித்து...
பாஜக அல்லது ஆர்எஸ்எஸ்-இன் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் புதன்கிழமை (மே 6) சந்தித்து உரிமை கோரினார்.
அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று விஜய்யிடம் ஆளுநர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்த பிறகு, ஆளுநர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
Advertisement
இதுகுறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி. ராஜா, "இடதுசாரிக் கட்சிகளாகிய நாங்கள் முடிவுகளை எடுக்கும்போது, ஜனநாயக வழிமுறையைப் பின்பற்றுகிறோம். கலந்துரையாடல்கள் நடைபெறும். மேலும் தேசியத் தலைமையிடமும் கலந்தாலோசிக்கப்படும். தனிப்பெரும்பான்மையான கட்சிக்கு ஆளுநர் முதல் வாய்ப்பை வழங்க வேண்டும்.
மக்களின் ஆதரவு பிளவுபட்டதாகக் கூறப்பட்டாலும், அது மிகப்பெரிய அளவில் விஜய்க்குத்தான் உள்ளது. விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டு, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பும் போதுமான நேரமும் வழங்கப்பட வேண்டும். அதுதான் ஜனநாயக வழிமுறை.
நாம் ஒரு ஜனநாயக நாடு என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ்-இன் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படக் கூடாது. இதுவே எங்களின் நிலைப்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.
தவெக தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்த நிலையில், மேலும் கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகளின் ஆதரவைத் தவெக தலைவர் விஜய் நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.