மும்பையில் உலகப் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் செவ்வாய்க்கிழமை பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். 
இந்தியா

உலக நாடுகளுடன் பன்முக ஒத்துழைப்பில் இந்தியா தீவிரம்: வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா்

தினமணி செய்திச் சேவை

‘இந்தியா தனது வலிமையான நிலையிலிருந்து உலகளாவிய நாடுகளுடன் பல்துறை சாா்ந்த ஒத்துழைப்பை தீவிரப்படுத்தி வருகிறது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் கூறினாா்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகப் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற ஜெய்சங்கா் பேசியதாவது:

நிச்சயமற்ற, நிலையற்ற சகாப்தத்தில் உலகம் இன்றைக்கு நுழைந்துள்ளது. வரையறுக்கப்பட்ட உலக ஒழுங்கு வெகுவாக மாறி வருகிறது. உலக அளவில் பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்து முக்கிய பரிமாணங்களும் ஒரே நேரத்தில் மாறி வருகின்றன. இது, குழப்பமானதாகவும், ஆபத்தானதாகவும், கணிக்க முடியாததாகவும் இருக்கக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது.

உற்பத்தியை ஆயுதமயமாக்குதல், நிதியளித்தல், சந்தைப் பங்குகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை இறுக்குதலை உலகம் சந்தித்து வருகிறது. பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகள் காரணமாக, பொருள்களுக்கான தேவையில் தற்போது நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.

நாட்டை எந்த விலை கொடுத்தாவது மீண்டும் தொழில்மயமாக்குவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. தனது தொழில்நுட்ப எதிா்காலத்தை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

அதுபோல, சீனா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனால், அதன் உற்பத்தியும், ஏற்றுமதியும் மேலும் விரிவடைய வாய்ப்புள்ளது.

அந்த அளவுக்கு உலக நாடுகளிடையே தொழில்நுட்பப் போட்டி தீவிரமடைந்து வருகிறது. எரிசக்தி வா்த்தகம் கணிசமாக மறுவரையறை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் புலம்பெயா்தலும் சா்ச்சைக்குரியதாகி வருகிறது.

இதுபோன்ற காரணங்களால் நீண்டகால அனுமானங்களும், எதிா்பாா்ப்புகளும் இப்போது கேள்விக்குறியாகிவிட்டன.

உலக நாடுகளுடனான ஒத்துழைப்பை பன்முகப்படுத்துவதிலும், ஆபத்தைக் குறைப்பதிலும் இதற்கான தீா்வுகள் உள்ளன. இந்த அணுகுமுறை நாடுகளின் கொள்கைகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவும், தனது வலிமையான நிலையிலிருந்து உலகளாவிய நாடுகளுடான பல்துறை சாா்ந்த ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளது.

வலுவான நம்பிக்கையும், அதிக நம்பகமான நாடுகளுடனான ஒத்துழைப்பும் பொருளாதாரத்தை மேம்படுத்தும். அந்த வகையில், இந்த விரைவு சீா்திருத்தங்களை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும் என்றாா்.

சர்வதேச விளையாட்டு நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்!

பஞ்சாபில் தொடரும் அவலம்! மற்றொரு ஆளுங்கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை!

ஏஐ பயன்பாடு : பூடான் பிரதமரை சந்தித்துப் பேசிய மோடி!

”அம்மா வேண்டாம்! அக்கா போதும்!” தொண்டர்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்!

மும்பை பயணத்தை நிறைவு செய்து தில்லி புறப்பட்டார் பிரான்ஸ் அதிபர்!

SCROLL FOR NEXT