டிரம்ப்பிடம் மோடி பேசாததுதான் காரணம்: அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு
வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ரந்தீர் பேசுகையில், ”இந்தியாவும் அமெரிக்கா 2025 பிப்ரவரி முதல் இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த உறுதிபூண்டுள்ளன. அப்போதிருந்தே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கிறது.
இரு பெரிய பொருளாதாரங்களுக்கிடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஆர்வமாக உள்ளோம். பிரதமர் மோடியும் டிரம்ப்பும் 2025-ல் 8 முறை தொலைபேசியில் பேசியுள்ளனர். பிரதமர் மோடியும் டிரம்ப்பும் நட்புறவைக் கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசாததே வர்த்தக ஒப்பந்தத்தின் இழுபறிக்குக் காரணம் என்று அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹாவர்ட் லூட்னிக் கூறினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க அதிபர் டிரம்ப்பை அழைத்துப் பேசுமாறு பிரதமர் மோடியிடம் கேட்டேன். ஆனால், இதனைச் செய்வதில் இந்தியாவுக்கு சங்கடமாக இருந்ததுபோல. அதனால்தான், டிரம்ப்பை மோடி அழைக்கவில்லை.
இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், வியத்நாம் என பல்வேறு ஒப்பந்தங்களை அறிவித்து, முடித்து விட்டோம். ஏனென்றால், அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
ஆனால், அதற்கு முன்னதாக இந்தியா இறுதிசெய்யப்பட்டு விடும் என்று கருதினோம். அதிகளவிலான ஒப்பந்தங்கள் வந்ததையடுத்துதான், தாங்கள் தயாராக இருப்பதாக இந்தியா கூறியது. அப்போதுதான், அவர்களிடம் தயாராக இருக்கிறீர்களா?” என்று தெரிவித்தார்.
PM Modi, US President Trump spoke 8 times in 2025: MEA on Lutnick's claim on India-US trade deal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.