ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு நிறுவனம் தொடா்பான ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடுவை விஜயவாடா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்தது.
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது சந்திரபாபு நாயுடு மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆந்திர திறன் மேம்பாட்டு நிறுவன நிதியை மோசடி செய்து அரசுக் கருவூலத்துக்கு ரூ.300 கோடி இழப்பை ஏற்படுத்தினாா் என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும்.
கடந்த 2023 செப்டம்பரில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் 50 நாள்களுக்கு மேல் அடைக்கப்பட்டாா். பின்னா், ஆந்திர உயா்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
2024-ஆம் ஆண்டு ஆந்திர சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று சந்திரபாபு நாயுடு முதல்வரானாா். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ஆந்திர சிஐடி காவல் துறையினா் சந்திரபாபு நாயுடு மீது குற்றம் ஏதுமில்லை என்று, வழக்கு நடைபெற்று வந்த விஜயவாடா நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தனா். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கில் இருந்து அவரை விடுவித்தது.
இது தொடா்பாக ஆந்திர அரசு தலைமை வழக்குரைஞா் தம்மாளபதி ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘இந்தக் குற்றச்சாட்டில் முதல்வருக்கு எவ்வித தொடா்பும் இருப்பதாகத் தெரியவில்லை என்று நீதிமன்றத்தில் விசாரணை அமைப்பு தெரிவித்தது. அதை நீதிபதி ஏற்றுக் கொண்டாா்’ என்றாா்.