எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!
மும்பையின் மேயர் பதவி குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வர்ஷா கெய்க்வாட் பேச்சு...
காங்கிரஸ் கட்சியின் ஆதரவின்றி யாராலும் மும்பை மாநகராட்சி மேயராகப் பதவி வகிக்க முடியாது என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.
மும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் ஜன.15 ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என மும்பையின் காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான வர்ஷா கெய்க்வாட் இன்று (ஜன. 13) பேசியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
“மும்பை நகரத்தின் அரசியல் சூழல் மாற்றம் பெற்று வருகின்றது. இந்த முறை காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெறும். தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவின்றி யாராலும் மும்பை மாநகராட்சியின் மேயராகப் பதவியேற்க முடியாது.
மற்றவர்கள் மதம், சாதி மற்றும் மொழி குறித்து சண்டையிட்டு வருகின்றனர். ஆனால், எங்களது நோக்கம் வளர்ச்சி மட்டுமே. மும்பை நகரம் கடும் வாகன நெரிசல், தண்ணீர் விநியோகம், கழிவுகள் மேலாண்மை, காற்று மாசுப்பாடு ஆகிய பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றது.
எனவே, மக்களுக்காகக் களத்தில் இறங்கி செயல்படக் கூடிய மேயர்தான் நமக்குத் தேவைப்படுகிறார்கள். காங்கிரஸ் கூட்டணி தலித், இஸ்லாமியர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், முந்தைய தேர்தல்களை விடவும் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றக்கூடும்” என்று அவர் கூறியுள்ளார்.