மாயமான காக்கிநாடா குழந்தை எங்கே? துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
மாயமான காக்கிநாடா குழந்தையை தேடும் காவல்துறை சார்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் கடந்த ஜூன் 6ஆம் தேதி காணாமல் போன 2 வயது குழந்தையின் நிலை இதுவரை என்னவென்று தெரியாத நிலையில், வெட்டாபுரம் காவல்துறையினர், மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்கள்.
குழந்தையின் புகைப்படம், விவரங்கள், காணாமல் போனது குறித்த தகவலுடன், குழந்தையைப் பற்றி ஏதேனம் தகவல் தெரிந்தாலோ அல்லது அன்றைய நாளில் குழந்தையை எங்கேனம் பார்த்திருந்தாலோ தகவல் தெரிவிக்குமாறு தொலைபேசி எண்களுடன் துண்டுப் பிரசும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குழந்தையைக் கண்டுபிடிக்க பயனுள்ள தகவல்களை தருபவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
குழந்தை எங்கே?
துனி என்ற கிராமத்தில் குழந்தை காணாமல் போன நிலையில், மூன்று வாரங்கள் ஆகியும் டிரோன்கள் மூலமும், 400 காவல்துறையினர் தேடியும் இதுவரை ஒரு சிறு துப்பு கூட கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பாமாயில் பண்ணைக்கு அருகே வாழ்ந்து வந்த தம்பதிகளின் 2 வயது குழந்தையை பேரிடர் மீட்புப் படை வீரர்களும் தேடி வருகிறார்கள். தொடர்ந்து தேடுதல் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலில், வனவிலங்குகள் ஏதேனும் குழந்தையை தூக்கிச் சென்றிருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே காவல்துறையினர், வனப்பகுதிக்கு அருகே பொம்மைகளை உருவாக்கி அதற்குள் கறித் துண்டுகளை வைத்தனர். ஆனால், அந்த பொம்மை இருக்கும் இடத்துக்கு அருகே எந்த வன விலங்கும் வரவில்லை. எனவே, வன விலங்கு குழந்தையை தூக்கிச் சென்றிருக்கும் என்பதை உறுதி செய்ய முடியாமல் போனது.
தற்போது காணாமல் போன குழந்தை பற்றி ஏதேனும் துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வீட்டுக்கு வெளியே குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, தந்தை பண்ணைக்குச் செல்வதைப் பார்த்து அவர் பின்னால் சென்றிருக்கிறது. தந்தையும் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த வீட்டு வாசலில் விட்டுவிட்டு, மனைவியிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.
மனைவியோ, குழந்தை வீட்டுக்குள்தானே இருக்கிறது என்று நினைத்திருக்கிறார். ஆனால், குழந்தை வாசலை தாண்டி வெளியே சென்ற நிலையில் மாயமானது தெரிய வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
குழந்தையுடன் மாயமான நாய் 2 நாள்களில் திரும்பி வந்தது. ஆனால், அசாதாரணமாக தென்பட்ட நாய் உணவெதுவும் சாப்பிடாமல் இறந்துவிட்டது இன்னமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வந்தாலும், குழந்தைக்கு என்னவாகியிருக்கும் என்ற கேள்விக்கு இன்னும் விடைதெரியாமல் கலங்கி நிற்கிறது ஒட்டுமொத்த கிராமமும்.
Where is the missing Kakinada child? Leaflets distributed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.