புதிய சா்ச்சையில் சிக்கியுள்ள நீட் மறுதேர்வு: தவறான கேள்விக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா?
புதிய சா்ச்சையில் சிக்கியுள்ள நீட் மறுதேர்வு குறித்து...
புது தில்லி: கடந்த மாதம் 21 ஆம் தேதி நடந்து முடிந்த நீட் மறுதேர்வில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டிருந்ததை ஒப்புக்கொண்ட தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ), அனைத்து மாணவர்களுக்கும் நான்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கும் நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, நிகழாண்டுக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், சில இடங்களில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பு இதுதொடா்பான விசாரணையை முன்னெடுத்தது.
Advertisement
Advertisement
இதனிடையே, அந்தத் தோ்வை ரத்து செய்வதாக தேசிய தோ்வு முகமை அறிவித்தது. மறுதோ்வுகள் ஜூன் 21-ஆம் தேதி வெற்றிகரமாக முடிந்தது. இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களுக்குத் தலா 45 கேள்விகள் வீதம் மொத்தம் 180 கேள்விகள் என மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நீட் மறுதேர்விலும் குளறுபடிகள் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது இயற்பியல் வினாத்தாளில் இரண்டு குளறுபடிகள் நடந்திருப்பபது தற்போது தெரியவந்துள்ளது.
இதில், ஒரு கேள்விக்கு கொடுக்கப்பட்டிருந்த நான்கு விடைகளும் தவறாகவும், மற்றொரு கேள்விக்கு இரண்டு விடைகள் சரியானவையாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நான்கு விடைகளும் தவறாக இருந்த அந்த கேள்வி நீக்கப்படுவதாகவும், இதன் விளைவாக, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தலா நான்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகவை அறிவித்துள்ளது.
ஆனால், இரண்டு விடைகள் சரியாக இருந்த மற்றொரு கேள்வி குறித்த கோரிக்கைகளுக்கு தேசிய தேர்வு முகமையோ அல்லது மத்திய கல்வி அமைச்சகமோ இதுவரை அதிகாரப்பூர்வமான எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தில்லியைச் சேர்ந்த 'விஷனரி மாஸ்டர்ஸ்' நிறுவனத்தின் இயக்குநர் ஹர்பிரீத் சிங் கூறுகையில், "வெர்னியர் காலிப்பர்ஸ் (Vernier Callipers) தொடர்பான 40 ஆவது கேள்விக்கு நான்கு தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை நான்கும் தவறானவை. சரியான விடை 1.6 செ.மீ ஆகும், ஆனால் 40-வது கேள்விக்கான தெரிவுகளில் சரியான விடை இடம்பெறவில்லை," என்று தெரிவித்தார்.
அதேபோன்று, மின்காந்த அலைகள் (Electromagnetic waves) தொடர்பான 22-ஆவது கேள்வியில் மற்றொரு குளறுபடி நடந்துள்ளது. பொதுவாக ஒரு கேள்விக்கு ஒரே ஒரு விடைதான் இருக்க வேண்டும் என்றாலும், இந்தக் கேள்விக்கு 3 மற்றும் 4 ஆகிய இரண்டு விடைகளுமே சரியானவையாக உள்ளன," என்று சிங் கூறினார்.
தேசிய தேர்வு முகமையின் விதிமுறைப்படி, ஒரு கேள்வி தவறாக இருந்தாலோ அல்லது நீக்கப்பட்டாலோ, அந்த தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் அந்த கேள்வியை எதிர்கொண்டாலும் இல்லாவிட்டாலும் 4 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும்.
ஏற்கனவே நீட் தேர்வு குளறுபடி என தொடா் சா்ச்சையில் சிக்கியுள்ள என்டிஏ, தற்போது புதிய சா்ச்சையில் சிக்கியுள்ளது. நீட் மறுதேர்விலும் இதுபோன்ற குளறுபடிகள் நிகழ்ந்திருப்பது மாணவர்களை மீண்டும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், நீட் மறுதோ்வு முடிவுகளை வரும் 20-ஆம் தேதி வெளியிட தேசிய தோ்வுகள் முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில், நீட் தோ்வில் ஏற்பட்டு வரும் தொடா் குளறுபடிகள், தோ்வு நடைமுறையின் நம்பகத்தன்மை மீது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
One question had no correct answer and the National Testing Agency (NTA) will be dropping it, resulting in four bonus marks to all students.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.