முகப்பு
இந்தியா

கிண்டூர் டூ தெஹ்ரான்! ஈரானின் முதல் தலைமை மதகுரு ஓர் இந்திய வம்சாவளியா?

ஈரானின் முதல் தலைமை மதகுரு அயதுல்லா ரூஹோல்லா கோமேனி பற்றி...

Updated On : 1 மார்ச், 2026 at 11:56 AM
ஈரானின் முதல் தலைமை மதகுரு அயதுல்லா ரூஹோல்லா கோமேனி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 11:22 AM

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து, ஈரானில் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், 7 நாள்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்தக் கொடூர தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

ஈரானின் முதல் தலைமை மதகுருவான அயதுல்லா ரூஹோல்லா கோமேனி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது.

Advertisement

Updated On : 1 மார்ச், 2026 at 11:45 AM

ஈரானில் 1979 வரையில் மன்னராட்சி முறைதான் இருந்து வந்தது. அப்போதைய ஆட்சியாளர் முகமது ரிசா பலவீ என்பவர், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாமிய கொள்கைப்படி செயல்படாததால், ரிசா பலவீ மீது அந்நாட்டினருக்கு அதிருப்தியே இருந்தது.

இந்த நிலையில்தான், ரிசா பலவீக்கு எதிராக புரட்சி வெடித்தது. இந்தப் புரட்சியில் ஈரானிய இடதுசாரி அமைப்புகள், மாணவர் இயக்கம் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் ஈடுபட்டன. அயதுல்லா ரூஹோல்லா கோமேனி என்பவர் தலைமையில் நடத்தப்பட்ட இந்தப் புரட்சி, வெற்றியும் பெற்றது.

முகமது ரிசா பலவீ வீழ்த்தப்பட்டு, ஈரானில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. மன்னராட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரான், குடியரசு நாடாகச் செயல்படத் தொடங்கியது.

புரட்சியை வழிநடத்திய அயதுல்லா ரூஹோல்லா கோமேனி, ஈரானின் நவீன சிற்பி என்று போற்றப்பட்டார். இவரின் புகைப்படங்கள்தான், ஈரான் நாட்டின் கரன்சி, பள்ளிகள், அரசு கட்டடங்கள் என எங்கும் காணப்படும்.

ஆனால், அயதுல்லா ரூஹோல்லா கோமேனி ஓர் இந்திய வம்சாவளி ஆவார்.

Updated On : 1 மார்ச், 2026 at 11:50 AM

கோமேனியின் தாத்தா சையத் அகமது மூசாவி இந்தி, கி.பி. 1800-களில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிண்டூர் கிராமத்தில் பிறந்தவர். இவர் 1830-க்கு பிறகு, இந்தியாவைவிட்டு வெளியேறி, ஈரானில் குடியேறினார்.

இருப்பினும், இந்திய பூர்விகத்தை அடையாளமாக்கிக் கொள்வதற்காக, தனது பெயரின் இறுதியில் இந்தி என்று சேர்த்துக் கொண்டார்.

சையத் அகமது, முஸ்லிம் மதத்தின் ஷியா சமூகத்தில் தீவிரமாக இருந்த நிலையில், ஷியாவின் உயர் பதவியையும் அடைந்தார்.

சையத் அகமதுவின் 5 குழந்தைகளில் ஒருவர் முஸ்தபா. முஸ்தபாவின் மகன்தான் - அயதுல்லா ரூஹோல்லா கோமேனி. இதன் மூலம், ஈரானின் முதல் தலைமை மதகுருவான அயதுல்லா ரூஹோல்லா கோமேனி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது.

1989-ல் அயதுல்லா ரூஹோல்லா கோமேனி மறைந்ததையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அயதுல்லா கமேனி அடுத்த தலைமை மதகுருவாக பதவியேற்றார்.

ஈரானின் இரண்டாவது தலைமை மதகுருவான அயதுல்லா கமேனிதான், இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல் ஏன்?

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுப் படைத் தாக்குதலை மேற்கொண்டன. இந்தத் தாக்குதலின்போது, ஈரானில் உள்ள ஒரு மகளிா் தொடக்கப் பள்ளி மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டதில், 148 பேர் பலியாகினர்.

மேலும், தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதுடன், அவரின் மகள், மருமகன், பேரனும் கொல்லப்பட்டதாக ஈரான் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில், தாக்குதல் நடத்திய இஸ்ரேல் - அமெரிக்கா மற்றும் பதிலடி கொடுத்த ஈரான் என இருதரப்புக்கும் ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலைத் தொடர்ந்து, தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, சர்வதேச மோதல் காரணமாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,26,200-க்கும் கிராமுக்கு ரூ. 225 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,775-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

summary

The historical link between Iran’s First Supreme Leader Ayatollah Ruhollah Khomeini and Uttar Pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.