கிண்டூர் டூ தெஹ்ரான்! ஈரானின் முதல் தலைமை மதகுரு ஓர் இந்திய வம்சாவளியா?
ஈரானின் முதல் தலைமை மதகுரு அயதுல்லா ரூஹோல்லா கோமேனி பற்றி...
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து, ஈரானில் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், 7 நாள்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தக் கொடூர தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
ஈரானின் முதல் தலைமை மதகுருவான அயதுல்லா ரூஹோல்லா கோமேனி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது.
ஈரானில் 1979 வரையில் மன்னராட்சி முறைதான் இருந்து வந்தது. அப்போதைய ஆட்சியாளர் முகமது ரிசா பலவீ என்பவர், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாமிய கொள்கைப்படி செயல்படாததால், ரிசா பலவீ மீது அந்நாட்டினருக்கு அதிருப்தியே இருந்தது.
இந்த நிலையில்தான், ரிசா பலவீக்கு எதிராக புரட்சி வெடித்தது. இந்தப் புரட்சியில் ஈரானிய இடதுசாரி அமைப்புகள், மாணவர் இயக்கம் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் ஈடுபட்டன. அயதுல்லா ரூஹோல்லா கோமேனி என்பவர் தலைமையில் நடத்தப்பட்ட இந்தப் புரட்சி, வெற்றியும் பெற்றது.
முகமது ரிசா பலவீ வீழ்த்தப்பட்டு, ஈரானில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. மன்னராட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரான், குடியரசு நாடாகச் செயல்படத் தொடங்கியது.
புரட்சியை வழிநடத்திய அயதுல்லா ரூஹோல்லா கோமேனி, ஈரானின் நவீன சிற்பி என்று போற்றப்பட்டார். இவரின் புகைப்படங்கள்தான், ஈரான் நாட்டின் கரன்சி, பள்ளிகள், அரசு கட்டடங்கள் என எங்கும் காணப்படும்.
ஆனால், அயதுல்லா ரூஹோல்லா கோமேனி ஓர் இந்திய வம்சாவளி ஆவார்.
கோமேனியின் தாத்தா சையத் அகமது மூசாவி இந்தி, கி.பி. 1800-களில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிண்டூர் கிராமத்தில் பிறந்தவர். இவர் 1830-க்கு பிறகு, இந்தியாவைவிட்டு வெளியேறி, ஈரானில் குடியேறினார்.
இருப்பினும், இந்திய பூர்விகத்தை அடையாளமாக்கிக் கொள்வதற்காக, தனது பெயரின் இறுதியில் இந்தி என்று சேர்த்துக் கொண்டார்.
சையத் அகமது, முஸ்லிம் மதத்தின் ஷியா சமூகத்தில் தீவிரமாக இருந்த நிலையில், ஷியாவின் உயர் பதவியையும் அடைந்தார்.
சையத் அகமதுவின் 5 குழந்தைகளில் ஒருவர் முஸ்தபா. முஸ்தபாவின் மகன்தான் - அயதுல்லா ரூஹோல்லா கோமேனி. இதன் மூலம், ஈரானின் முதல் தலைமை மதகுருவான அயதுல்லா ரூஹோல்லா கோமேனி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது.
1989-ல் அயதுல்லா ரூஹோல்லா கோமேனி மறைந்ததையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அயதுல்லா கமேனி அடுத்த தலைமை மதகுருவாக பதவியேற்றார்.
ஈரானின் இரண்டாவது தலைமை மதகுருவான அயதுல்லா கமேனிதான், இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.