கர்நாடகம்: கார் தீப்பிடித்ததில் முதியவர் பலி
கர்நாடகத்தில் கார் தீப்பிடித்ததில் 70 வயது முதியவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் கார் தீப்பிடித்ததில் 70 வயது முதியவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ரகுவனஹள்ளியைச் சேர்ந்தவர் உதய் குமார்(70). இவர், அச்சேபள்ளி கிராஸ் அருகே தனது தாயாரைப் பார்த்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கார் தீப்பிடித்து எரிந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கார் தீப்பிடித்து எரிவதைக் கண்ட அவ்வழியாகச் சென்றவர்கள் உள்ளூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், தீ வேகமாக வாகனம் முழுவதும் பரவியதால் அவர் பலியானார்.
பின்னர், அவரது கருகிய உடல் காரில் இருந்து மீட்கப்பட்டதாக போலீஸார் கூறினர். ஆரம்பக் கட்ட விசாரணையை மேற்கோள் காட்டி மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீப்பற்ற காரணமாக இருக்கக்கூடிய விபத்து அல்லது கார் எந்திர கோளாறு போன்ற எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கவில்லை.
எனவே, இது தற்கொலை சம்பவமாகத் தோன்றுகிறது. எனினும், குழுக்கள் மாதிரிகள் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்துள்ளன. தீப்பற்ற காரணமாக எந்த தொழில்நுட்ப கோளாறும் இருந்ததா என்பதை உறுதிப்படுத்த மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.