நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: 8 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி!
லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது தொடர்பாக...
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 8 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
பெங்களூரில் இருந்து மதுரையை நோக்கி சொகுசு கார் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த ஈசநத்தம் சாலை பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்தது.
காரை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சேர்ந்த வீரா (40) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது சாலையின் குறுக்கே அரவக்குறிச்சி கலைவாணர் தெரு பாண்டித்துரை வயது (32) என்பவர் திடீரென தனது இருசக்கர வாகனத்தில் காரின் குறுக்கே வந்ததால், கார் அவர் மீது மோதாமல் இருக்க காரை சாலையோரம் திருப்பியபோது, கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
Advertisement
Advertisement
இதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் வீரா மற்றும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பூதிபுரம் ரோடு கருதி வீரன் பட்டியை சேர்ந்த அரவிந்த் (30), அவரது மனைவி ஜனனி 28) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியான ஜனனி 8 மாத கர்ப்பிணி ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதே காரில் பயணம் செய்த வீராவின் மகன் அரவிந்த் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டித்துரை (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.