கழுதைப் பண்ணை வைத்தால் ரூ.50 லட்சம் வரை மானியம்!
நாட்டில் கழுதைப் பண்ணை வைத்தால் ரூ.50 லட்சம் வரை மத்திய அரசு மானியம் வழங்குவது பற்றி..
இந்திய அரசு தேசிய கால்நடை இயக்கம் மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கழுதை இனப்பெருக்க பண்ணைகள் அமைக்க, மூலதன மானியமாக அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை வழங்குகிறது.
தொழில்முனைவோர்களும், விவசாயிகளும் கழுதைப் பண்ணை உள்ளிட்ட கால்நடைப் பண்ணைகள் அமைத்து வாழ்வாதாரத்தை வளமாக்கவும், வணிக வாய்ப்புகளை அதிகரிக்கவும் தேசிய கால்நடை இயக்கம் மூலம் நிதி ஆதரவை அளித்து வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் கழுதை, குதிரை, ஒட்டகங்களின் இனப்பெருக்க பண்ணைகளை அமைக்கு தனிநபர்கள் அல்லது விவசாயிகள் அல்லது விவசாயக் குழுக்களுக்கு மூலதன மானியமாக ரூ.50 லட்சம் வரை மத்திய அரசே வழங்கும்.
Advertisement
Advertisement
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கால்நடை பண்ணைகளை அமைக்கத் தேவையான மொத்த மூலதனத்தில், 50 சதவிகிதத்தை மத்திய அரசே மானியமாக அளிக்கும். இது அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
தனிநபர்கள், விவசாயிகள், விவசாயக் குழுக்கள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவை இந்த மானியம் பெற தகுதிப் பெற்றவர்கள் ஆவர். மானியம் கோரி விண்ணப்பிக்கும் கால்நடை பண்ணையில் குறைந்தபட்சம் 50 பெண் கழுதைகளும் 5 ஆண் கழுதைகளும் இருக்க வேண்டும்.
இந்த கால்நடைப் பண்ணைக்கான வங்கிக் கடன் அனுமதி கிடைத்ததும், முதல் தவணையை மத்திய அரசு வழங்கும்.
இரண்டாவது தவணை, கால்நடை பண்ணை அமைக்கப்பட்டு, அதிகாரிகள் மூலம் உறுதி செய்யப்பட்டபிறகு வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கழுதைகள் இனப்பெருக்கப் பண்ணைகள் அமைக்க மட்டுமே மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில், கழுதைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், அதனை அதிகரிக்க இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டைக் காட்டிலும் 2019ஆம் ஆண்டில் கழுதைகளின் விகிதம் 60 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தரவுகள் பதிவாகியுள்ளன. போக்குவரத்து உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கழுதைகளின் தேவை தற்போது குறைந்துவிட்டதால் அதன் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாகவும், அதனை அதிகரிக்கவே மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.